Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பாலம் சாலையில் திட்டமிடாத பணியால் 4 மணி நேரம் நெரிசல்

பாலம் சாலையில் திட்டமிடாத பணியால் 4 மணி நேரம் நெரிசல்

பாலம் சாலையில் திட்டமிடாத பணியால் 4 மணி நேரம் நெரிசல்

பாலம் சாலையில் திட்டமிடாத பணியால் 4 மணி நேரம் நெரிசல்

ADDED : ஜூன் 07, 2024 12:15 AM


Google News
பள்ளிப்பாளையம் : பள்ளிப்பாளையம் பாலம் சாலையில் திட்டமிடாத பணிகளால், வாகனங்கள் செல்ல முடியாமல், 4 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்து, வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.

பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதி பாலம் சாலையில் மேம்பாலம், சாலை விரிவாக்கம், பிரதான வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பாலம் வழியாகத்தான், சேலம், சங்ககிரி, நாமக்கல், ராசிபுரம், குமாரபாளையம், இடைப்பாடி, திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதியில் இருந்து பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் ஈரோட்டிற்கு செல்ல முடியும். இதனால் இந்த பாலம் சாலை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.

இந்த பாலம் சாலையில் பணிகள் நடக்கும்போது, வாகனங்கள் சீராக செல்ல எந்த ஏற்பாடும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் செய்யவில்லை. மேலும், பல இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நேற்று காலை, 8:00 முதல், 12:00 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பஸ் உள்ளிட்ட எந்த வாகனமும் சீராக செல்ல முடியாமல், 2 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்திலும், வாகனங்கள் வரிசையாக நின்றன. டூவீலர்கள் செல்வதற்கு கூட இடமில்லாமல் தவிப்புக்குள்ளாகினர். அந்தளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வேலைக்கு சென்ற பொதுமக்கள், கை குழந்தையுடன் மருத்துவமனைக்கு சென்றவர்கள் கடும் சிரமப்பட்டனர்.

இதுகுறித்து, மாவட்ட கவுன்சிலர் செந்தில் கூறியதாவது:இன்று (நேற்று) காலை, 4 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என, போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தால், போலீசார் இல்லை என தகவல் தெரிவித்தனர். பின், ஒரே ஒரு போலீசார் மட்டும் வந்து போக்குவரத்தை சீரமைக்க படாத பாடுபட்டார். தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், போலீசார் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட வேண்டும். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பள்ளிப்பாளையம் நகராட்சி அதிகாரிகள் வாகனங்கள் சீராக செல்ல மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையென்றால், 2 நாளில் மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us