Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஒரே நேரத்தில் கட்சி - கவுன்சில் கூட்டம் மதுரை தி.மு.க.,வில் கோஷ்டி பூசல் உச்சம்

ஒரே நேரத்தில் கட்சி - கவுன்சில் கூட்டம் மதுரை தி.மு.க.,வில் கோஷ்டி பூசல் உச்சம்

ஒரே நேரத்தில் கட்சி - கவுன்சில் கூட்டம் மதுரை தி.மு.க.,வில் கோஷ்டி பூசல் உச்சம்

ஒரே நேரத்தில் கட்சி - கவுன்சில் கூட்டம் மதுரை தி.மு.க.,வில் கோஷ்டி பூசல் உச்சம்

ADDED : மே 24, 2025 02:48 AM


Google News
Latest Tamil News
மதுரை:மதுரையில் நேற்று ஒரே நேரத்தில், கட்சி செயல் வீரர்கள் கூட்டமும், மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டமும் நடத்தப்பட்ட நிலையில், பெரும்பாலான கவுன்சிலர்கள், கட்சி தான் முக்கியம் என, கட்சி கூட்டத்திற்கு சென்றனர்.

முதல்வர் ஸ்டாலின் மே 31ல் மதுரையில் ரோடு ஷோ நிகழ்ச்சி, ஜூன் 1ல் தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இது குறித்து கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தை மதுரையின் மூன்று மாவட்ட செயலர்களான அமைச்சர் மூர்த்தி, தளபதி, மணிமாறன் ஆகியோர் இணைந்து நேற்று நடத்தினர்.இதில், அமைச்சர் தியாகராஜனும் பங்கேற்றார்.

ஆனால், அதேநேரம் அமைச்சர் தியாகராஜனின் ஆதரவாளரான மாநகராட்சி மேயர் இந்திராணி, மாநகராட்சி மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டத்தை நேற்று நடத்தினார். மதுரை மாநகராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட செயலர்களின் ஆதரவாளர்கள், மேயர் ஆதரவாளர்கள் என பிரிந்து கிடக்கின்றனர்.

ஒரே நேரத்தில், கட்சி மற்றும் கவுன்சில் கூட்டம் நடந்ததால், 95 சதவீதம் தி.மு.க., கவுன்சிலர்கள், கட்சி தான் முக்கியம் என, மாநகராட்சி கூட்டத்தை புறக்கணித்து, கட்சி கூட்டத்திற்கு சென்றனர்.

இதனால் கவுன்சில் கூட்டம் நடத்த கோரம் இல்லாத சூழல் ஏற்பட்டது. தி.மு.க., கவுன்சிலர்கள் பங்கேற்காதது குறித்து அ.தி.மு.க., -- -மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சிகள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டு, கூட்டத்தை ஒத்தி வைக்க வலியுறுத்தப்பட்டது. ஆனாலும், மேயர் கூட்டத்தை நடத்தினார்.

தி.மு.க., கவுன்சிலர்கள் கூறியதாவது:

மேயர், கவுன்சிலர் பதவிகளை கட்சி தான் கொடுத்தது. மதுரையில் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கும் முக்கிய கூட்டம் இது. கட்சி ரீதியாக மா.செ.,க்கு கட்டுப்பட்டவர்கள் தான் மேயர், கவுன்சிலர்கள்.

கட்சி கூட்டம் மே 23 அல்லது 28ல் நடத்த திட்டமிடப்பட்டது. முதல்வர் ரோடு ஷோ நிகழ்ச்சி முடிவு செய்யப்பட்டதால், கூட்டத்தை முன்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டது. இதுகுறித்து மேயர் தரப்புக்கு தெரிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட நாளில், ஒரு மணிநேரம் தாமதமாக கூட கவுன்சில் கூட்டத்தை மேயர் நடத்தியிருக்கலாம். ஒரே நேரத்தில் நடத்தியதால் தேவையில்லாத சர்ச்சை எழுந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

போதிய கோரம் இல்லாத நிலையில், எதிர்க்கட்சிகளை பேசி சரிகட்டி, 45 தீர்மானங்களையும் மேயர் நிறைவேற்றி, சாமர்த்தியம் காட்டி உள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us