ADDED : ஜூன் 11, 2024 06:39 AM
மதுரை : வேளாண் துறையின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசுநிலத்தை மேம்படுத்த தனிநபர் விவசாயிகள் மற்றும் குழுமத்திற்கு மானியம் வழங்கப்படுகிறது என வேளாண் துறை இணை இயக்குநர் சுப்புராஜ் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
நிலத்தில் வளர்ந்துள்ள புல், புதரை இயந்திரம் மூலம் அகற்றி லெவலிங் இயந்திரம் மூலம் சமப்படுத்தி உழ வேண்டும். இதற்கு ஆகும் செலவில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ஒரு எக்டேருக்கு ரூ.9600 மானியம் வழங்கப்படுகிறது. 13 வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். தனிநபர் விவசாயிகளுக்கு 480 எக்டேருக்கு ரூ.46.08 லட்சம் மானியம் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. குழுமமாக செயல்படும் விவசாயிகளுக்கு 16 எக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வரப்பில் பயறு வகை பயிர்களை சாகுபடி செய்வதற்கு ஒரு எக்டேருக்கு ரூ.300 வீதம் 3400 எக்டேருக்கு ரூ.10.2 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 2 எக்டேர் வரை மானியம் தரப்படும். நுண்ணுாட்ட கலவை, உயிர் உரம், உயிர்க்கட்டுப்பாட்டு காரணி, தொழு உரம் வாங்கினால் அதன் மதிப்பில் 50 சதவீதம் அதிகபட்சமாக ஒரு எக்டேருக்கு ரூ.1500 வீதம் 207 எக்டேருக்கு ரூ.31.12 லட்சம் மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கைத்தெளிப்பான், இயந்திர ஸ்பிரேயர் வாங்குவதற்கு ரூ.3000 மானியம் தரப்படும் என்றார்.