Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/போக்குவரத்து சோதனைச்சாவடியில் ரெய்டு; கணக்கில் வராத ரூ.2.89 லட்சம் பறிமுதல்

போக்குவரத்து சோதனைச்சாவடியில் ரெய்டு; கணக்கில் வராத ரூ.2.89 லட்சம் பறிமுதல்

போக்குவரத்து சோதனைச்சாவடியில் ரெய்டு; கணக்கில் வராத ரூ.2.89 லட்சம் பறிமுதல்

போக்குவரத்து சோதனைச்சாவடியில் ரெய்டு; கணக்கில் வராத ரூ.2.89 லட்சம் பறிமுதல்

ADDED : ஜூலை 13, 2024 12:36 AM


Google News
ஓசூர் : ஓசூரில், போக்குவரத்து சோதனைச்சாவடியில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத, 2.89 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக எல்லையான ஓசூரில் உள்ள பாகலுார் சாலையில், சமத்துவபுரம் அருகே நல்லுார் போக்குவரத்து சோதனைச்சாவடி இயங்குகிறது. இங்கு, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பாடி கட்டாத வாகனங்களுக்கு வரி விதிப்பது; தனியார் கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் சிறிய அளவிலான சரக்கு வாகனங்களுக்கு பர்மிட் வழங்குவது; அதிக லோடு ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது போன்ற பணிகளை, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மேற்கொள்கின்றனர். அப்போது, அபராதம் மற்றும் பர்மிட் கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்வதாக, மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன.

இதையடுத்து, டி.எஸ்.பி., வடிவேல் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலை, 6:00 மணிக்கு சோதனைச்சாவடியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கணக்கில் வராமல், இரண்டு லட்சத்து, 89 ஆயிரத்து, 500 ரூபாய் இருந்தது. பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் சாண்டல் உபெர்சியா மேரியிடம் விசாரித்தனர். அந்த பணத்திற்கு சரியான கணக்கு கூறாததால், லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். மோட்டார் வாகன ஆய்வாளர் சாண்டல் உபெர்சியா மேரி மற்றும் ஊழியர்கள் மீது, துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

* ஜூஜூவாடி போக்குவரத்து சோதனைச்சாவடியில் (உள்வழி) கடந்த, 5ல், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். அப்போது, இரண்டு லட்சத்து, 25 ஆயிரத்து, 950 ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல், ஜூஜூவாடியில் உள்ள மற்றொரு போக்குவரத்து சோதனைச்சாவடி (வெளிவழி) மற்றும் பாகலுார் சாலை நல்லுார் சோதனைச்சாவடியில் சோதனை நடத்தியிருந்தால், கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் சிக்கியிருக்கும் என, நமது நாளிதழில் கடந்த, 6ல் செய்தி வெளியானது. அதன்படி, நல்லுார் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று சோதனை மேற்கொண்டு பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us