ADDED : ஜூலை 13, 2024 12:35 AM
ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த சாரகப்பள்ளி அருகே ஒசட்டி கிராமத்தில், அந்தோணிசாமி மற்றும் சகாயராஜ் ஆகியோரது நர்சரி தோட்டத்தில், ஊடேதுர்க்கம் அருகே யு.குருபட்டியை சேர்ந்த மூன்று குடும்பத்தினர், குறைந்த கூலிக்கு கொத்தடிமையாக வேலை செய்து வருவதாக, மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றது.
இதையடுத்து, தேன்கனிக்கோட்டை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் மோகன்தாஸ், தொழிலாளர் ஆய்வாளர் சிவமூர்த்தி மற்றம் தளி போலீசார், தனியார் தொண்டு நிறுவனத்தினருடன் சென்று, மூன்று குடும்பத்தினரிடமும் விசாரித்தனர்.இதில், குறைந்த கூலி கொடுத்து கொத்தடிமைகளாக பணி அமர்த்தியது தெரியவந்தது. இதனால் மூன்று குடும்பத்தில் உள்ள நான்கு குழந்தைகள் உட்பட, 18 பேரை மீட்ட போலீசார் மற்றும் அதிகாரிகள், ஓசூர் அண்ணாமலை நகரில் உள்ள மாநகராட்சி நகர்புற ஆதரவற்றோருக்கான தங்கும் இல்லத்தில் தங்க வைத்தனர். நான்கு குழந்தைகளும் பள்ளி செல்லாமல், நர்சரியில் பணியாற்றியது தெரிந்தது. தளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.