ADDED : ஜூன் 20, 2024 02:52 AM
கரூர்:அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன் ஜாமின் கேட்கும் நில அபகரிப்பு தொடர்பான வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கரூர் மேலக்கரூர், சார் - பதிவாளர் முகமது அப்துல் காதர், போலியான ஆவணங்கள் தயாரித்து, 22 ஏக்கர் நிலத்தை கிரையம் செய்து கொண்டதாக, கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.
இதையடுத்து, யுவராஜ் உள்ளிட்ட, ஏழு பேர் மீது, 9ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தற்போது, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்த வழக்கில், தன்னை கைது செய்யாமல் இருக்க, முன்னாள் அ.தி.மு.க., அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலருமான விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், 12ம் தேதி முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம், ஜாமின் மனு மீதான விசாரணையை நாளை 21ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.