ADDED : ஜூலை 04, 2024 09:58 PM

சங்கராபுரம் : சங்கராபுரத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்ட தலைவர் காஞ்சனாமேரி தலைமை தாங்கினார். வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் தேவதாஸ், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜாகீர் உசேன், சுகாதார ஆய்வாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சரவணன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் தெய்வானை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்ட செயலாளர் பாசில் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் ரவி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக முறைப்படுத்த வேண்டும். காலி பணி இடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.