Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தொடர் மழையால் மாட்டுச்சந்தைக்கு குறைந்த வரத்து

தொடர் மழையால் மாட்டுச்சந்தைக்கு குறைந்த வரத்து

தொடர் மழையால் மாட்டுச்சந்தைக்கு குறைந்த வரத்து

தொடர் மழையால் மாட்டுச்சந்தைக்கு குறைந்த வரத்து

ADDED : ஜூன் 07, 2024 12:10 AM


Google News
ஈரோடு: கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு, தொடர் மழையால், மாடுகள் வரத்து வெகுவாக குறைந்தது.ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 70 கன்றுகளை அழைத்து வந்தனர். அவை, 6,000 ரூபாய் முதல், 24,000 ரூபாய் வரை விற்றன. இதில், 32,000 ரூபாய் முதல், 85,000 ரூபாய் மதிப்பில், 250 பசு மாடுகள், 27,000 ரூபாய் முதல், 68,000 ரூபாய் வரையிலான விலையில், 150 எருமை மாடுகள் விற்பனைக்கு அழைத்து வரப்பட்டன. தவிர விலை உயர்ந்த கலப்பின மாடுகளும் விற்பனையானது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மஹராஷ்டிரா, தெலுங்கானா உட்பட பல்வேறு பகுதி விவசாயிகள், வியாபாரிகள் வாங்கி சென்றனர்.இதுபற்றி, சந்தை நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த, 15 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பல இடங்களில் பசுந்தீவனம் கிடைப்பதாலும், விவசாய பணிகள் துவங்க உள்ளதாலும், சந்தைக்கு மாடுகளை குறைவாக அழைத்து வந்துள்ளனர். லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நிறைவடைந்ததால், வெளி மாநில விவசாயிகள், வியாபாரிகள் அதிகமாகவே வந்திருந்தனர். அதற்கேற்ப நேற்று வரத்தான மாடுகளில், 90 சதவீத மாடுகள் விற்பனையானது. இவ்வாறு கூறினர்.

புளியம்பட்டியில்...ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. கறவை, கலப்பின மாடுகள், எருமை, கன்றுகள் உள்பட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. தொடர் வறட்சியால், கடந்த மாதங்களில், மாடுகள் விற்பனை மந்தமாக இருந்தது. கடந்த சில நாட்களாக, புன்செய்புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் தீவன பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது. அதனால், கால்நடைகளை வாங்க, விவசாயிகள், ஆர்வம் காட்டினர்.

நேற்று கூடிய சந்தைக்கு, 10 எருமைகள், 200 கலப்பின மாடுகள், 80 கன்றுகள் 220 ஜெர்சி மாடுகளை, விவசாயிகள் கொண்டு வந்தனர். எருமைகள் 20-32 ஆயிரம் ரூபாய், கறுப்பு வெள்ளை மாடு, 22-43 ஆயிரம் ரூபாய், ஜெர்சி, 23-49 ஆயிரம், சிந்து, 20-44 ஆயிரம் ரூபாய், நாட்டுமாடு, 40-76 ஆயிரம் ரூபாய் வரை விற்றது. வளர்ப்பு கன்றுகள் 6,000 முதல், 15 ஆயிரம் வரை விலை போனது. கர்நாடகா, கேரள மாநில வியாபாரிகள் கால்நடைகளை வாங்கிச்சென்றனர்.அதேபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 200க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. 10 கிலோ எடை வெள்ளாடு, 7,000 ரூபாய் வரை, 10 கிலோ வரையிலான செம்மறி ஆடு, 6,500 ரூபாய் வரை விற்பனையானது. அனைத்து கால்நடைகளும், ஒரு கோடி ரூபாய்க்கு விற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us