Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 30 ஆண்டாக இல்லை சாக்கடை; வீடுகளில் புகும் கழிவுநீர் சின்னாளபட்டியில் தொடரும் அவலம்

30 ஆண்டாக இல்லை சாக்கடை; வீடுகளில் புகும் கழிவுநீர் சின்னாளபட்டியில் தொடரும் அவலம்

30 ஆண்டாக இல்லை சாக்கடை; வீடுகளில் புகும் கழிவுநீர் சின்னாளபட்டியில் தொடரும் அவலம்

30 ஆண்டாக இல்லை சாக்கடை; வீடுகளில் புகும் கழிவுநீர் சின்னாளபட்டியில் தொடரும் அவலம்

ADDED : ஜூலை 31, 2024 05:41 AM


Google News
Latest Tamil News
சின்னாளபட்டி, : சின்னாளபட்டி தம்பித்தோட்டம் முதல் குறுக்கு தெருவில் 30 ஆண்டுகளாக சாக்கடை வசதி இல்லை. மழை நேரத்தில் கழிவுநீர் வீடுகளில் புகுந்து தொற்று நோய் அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது.

சின்னாளபட்டி பேரூராட்சி 13வது வார்டில் உள்ள இப்பகுதியில் ரோடு, சாக்கடை , தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் பெயரளவில் கூட இல்லை. வீடுகளில் இருந்து வெளிவரும் அசுத்த நீரை பிளாஸ்டிக் குடங்களில் சேகரித்து அப்புறப்படுத்தும் அவலநிலை பல ஆண்டுகளாக தொடர்கிறது. சாக்கடை , சிமென்ட், பேவர் பிளாக் ரோடு தேவை குறித்து பலமுறை அதிகாரிகளிடமும், உள்ளாட்சி நிர்வாகத்திடமும் புகார் செய்தும் எவ்வித தீர்வும் இல்லை. சாரல் மழை நாட்களில் குடியிருப்புகளில் கழிவுநீர் புகுந்து தொற்று நோய் பரப்புவது வாடிக்கையாகி விட்டது. கொசுத்தொல்லை அதிகரிப்பால் பலர் டெங்கு, மலேரியா, வயிறு உபாதை பிரச்னைகளால் பாதிப்படையும் அவலம் நீடிக்கிறது .

திடக்கழிவு மேலாண்மைக்காக கழிவுகளை தரம் பிரித்து உரத்தயாரிப்பிற்கு அனுப்புவதை தவிர்க்கின்றனர். பல மாதங்களாக பாலிதீன் கழிவுகள் குவிந்து அசுத்த நீருடன் கொசுக்களை உற்பத்தி செய்து வருகிறது. கழிவுகள் மேவிய நிலையில் தவளை ,எலி ஆகியவற்றை விரட்டி வரும் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் குடியிருப்புகளுக்குள் புகுவது வாடிக்கையாகிவிட்டது. இப்பகுதியில் சுகாதாரத்தை பராமரிப்பதில் பேரூராட்சி நிர்வாகம் பாராமுகமாக உள்ளதாக மக்கள் புலம்புகின்றனர். இப்பிரச்னைகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இப்பகுதியில் சுகாதார சூழலை உருவாக்க முடியும்.

ரோடு வசதி இல்லை


ரவி, கூலி தொழிலாளி, சின்னாளபட்டி : ரோடு, சாக்கடை, வடிகால் வசதிகள் பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாப்படாமல் உள்ளது. ரோடு வசதியின்றி பள்ளம் மேடாக உள்ள தெருக்கள் விபத்துக்களை ஏற்படுத்தி வருகின்றன. மழை நேரங்களில் வாகனங்கள் மட்டுமின்றி பாதசாரிகளும் கடந்து செல்ல முடியாத அவல நிலை உள்ளன. அவசர காலங்களில் தெருக்களில் ஆட்டோ கூட செல்ல முடியாத நிலை உள்ளது. போதிய அடிப்படை வசதிகளற்ற நிலையில் 30 ஆண்டுகளாக இப்பகுதியினர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

---சவாலான சூழல்


சிவக்குமார்,தனியார் நிறுவன ஊழியர், சின்னாளபட்டி: மழை நேரத்தில் இப்பகுதி தெருக்களில் நடமாட முடியாத அவல நிலை ஏற்படுகிறது. தெருக்களில் ரோடு சேதமடைந்து பல ஆண்டுகள் ஆகியும் சீரமைக்க வில்லை. நடுவே உள்ள கரடு முரடான பாதைகளை கடந்து செல்வதில் சிரமம் உள்ளது. காலை, மாலை நேரங்களில், பள்ளி மாணவர்கள் காயங்களுடன் தெருக்களை கடந்து செல்ல வேண்டிய அவல நிலை நீடிக்கிறது. விஷப் பூச்சிகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் தீர்வு கிடைக்கவில்லை.

--விஷ பூச்சிகள் நடமாட்டம்


சந்திரா ,குடும்பத் தலைவி, சின்னாளபட்டி:தெருவில் வடிகால் வசதி இல்லாத நிலையில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் அசுத்த நீரை அப்புறப்படுத்துவதில் தினமும் அவதிக்குள்ளாகிறோம். கழிவுநீரை வீட்டுக்குள் தேக்கி வைத்து மறுநாள் பிளாஸ்டிக் குடங்களில் சேகரித்து அருகில் உள்ள பிறப்பகுதி சாக்கடையில் ஊற்ற வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். மழை நேரங்களில், தெருக்களில் அசுத்த நீர் தேங்கி சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருகிறது. திடக்கழிவு மேலாண்மையில் உள்ளாட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுகிறது. சாக்கடை வசதி இல்லாததால் கழிவு நீர் தேங்க பாம்பு, பூரான், தேள் போன்ற விஷப் பூச்சிகள் நடமாட்டம் தாராளமாக உள்ளன.

-அசுத்த நீர் தேக்கம்


லெட்சுமி ,குடும்ப தலைவி, சின்னாளபட்டி : இப்பகுதியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறினோம். சாரல் மழை பெய்தால் கூட ஒட்டுமொத்த கழிவு நீரும் குறுக்கு தெருவில் வந்து தேங்குகிறது. தெருக்களில் முறையான சாக்கடை இல்லை. இப்பகுதியில் சாக்கடை அமைப்பதோடு பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் உள்ள பெரிய வாறுகாலில் இதனை இணைக்க வேண்டும். இவ்வாறு முழுமையான கழிவுநீர் வெளியேற்றும் பணி மட்டுமே இப்பகுதியில் சுகாதாரம் காக்க நிரந்தர தீர்வாக இருக்கும். கொசுத்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தடை செய்யப்பட்ட பாலிதீன் கழிவுகளை கண்ட இடங்களில் குவித்து தீயிட்டு எரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us