Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சர்வீஸ் ரோட்டில் இல்லை விளக்குகள்; அடிக்கடி துண்டிக்கப்படும் மின்சாரம்

சர்வீஸ் ரோட்டில் இல்லை விளக்குகள்; அடிக்கடி துண்டிக்கப்படும் மின்சாரம்

சர்வீஸ் ரோட்டில் இல்லை விளக்குகள்; அடிக்கடி துண்டிக்கப்படும் மின்சாரம்

சர்வீஸ் ரோட்டில் இல்லை விளக்குகள்; அடிக்கடி துண்டிக்கப்படும் மின்சாரம்

ADDED : ஜூலை 13, 2024 05:19 AM


Google News
Latest Tamil News
ஒட்டன்சத்திரம் : சர்வீஸ் ரோட்டில் மின்விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் விபத்து , மின்சாரம் அடிக்கடி நிறுத்தப்படுவதால் அவதி என ஒட்டன்சத்திரம் நகராட்சி 1 வது வார்டு மக்கள் பரிதவிக்கின்றனர்.

குறிஞ்சிநகர், கூடலிங்கபுரம், பொன்னகரம், ஆத்துார், சீத்தப்பட்டி, தாராபுரம் ரோடு பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் உள்ள பொன்னகரம், குறிஞ்சி நகர் பகுதியில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் மக்கள் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த பகுதிகளுக்கு கள்ளிமந்தையம் துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் செய்யப்படுகிறது. இதனை மாற்றி ஒட்டன்சத்திரம் பகுதியிலிருந்து மின்வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தாராபுரம் ரோட்டில் இருந்து ஆத்துார் செல்லும் ரோடு சேதமடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்க வேண்டும். கூடலிங்கபுரம் வழியாக செல்லும் கழிவுநீர் ஓடை துார்வாரப்படாமல் இருப்பதால் செடிகள் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது. குப்பையும் கொட்டப்படுவதால் சுகாதாரம் பாதிக்கிறது. ஓடையை துார்வாரி தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும். இங்கு பொது சுகாதார வளாகம் இல்லாததால் திறந்த வெளியே கழிப்பிடமாக பயன்படுத்தப்படுகிறது. தாராபுரம் ரோட்டில் இருந்து குறிஞ்சி நகர், பழநிக்கு செல்லும் சர்வீஸ் ரோடுகளில் மின் விளக்கு வசதி , புதிய பைபாஸ் ரோட்டில் இருந்து ஐஸ்வர்யா நகர் செல்லும் ரோட்டில் பாலம் அமைக்க வேண்டும். குறிஞ்சிநகர் விரிவாக்க பகுதிகளில் குடிநீர், வடிகால், ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இறைச்சிக் கழிவுகளால் துர்நாற்றம்


வி.ராமசாமி, பா.ஜ., நகர துணை தலைவர்: பைபாஸ் ரோடுப் பகுதியில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. கூடலிங்கபுரத்தில் சுகாதார வளாகம் இல்லாததால் திறந்த வெளியே கழிப்பிடமாக பயன்படுத்தப்படுகிறது. தாராபுரம் ரோட்டில் இருந்து ஆத்துார் செல்லும் ரோடு சேதமடைந்துள்ளது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பைபாஸ் ரோடு பகுதியில் தெருவிளக்குகள்,வார்டு பகுதியில் அடிக்கடி கொசு மருந்து அடிக்க வேண்டும்.

அறிவிக்காத மின்தடையால் அவதி


கே. சுரேஷ்குமார், அ.தி.மு.க., வார்டு செயலாளர்: ஆத்துார், பொன்னகரம், குறிஞ்சி நகரில் உள்ள ரோடுகள் சேதமடைந்துள்ளது. இவற்றை சீரமைக்க வேண்டும். காலை வேளையில் மின்சாரம் அடிக்கடி தடைபடுவதால் பாதிப்பு ஏற்படுகிறது. ஆத்துார் பகுதியில் சாக்கடை சீராக அமைக்கப்படாமல் மேடும், பள்ளமாக உள்ளதால் கழிவுநீர் தேங்கி உள்ளது. குழாய் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட ரோடுகளை விரைந்து சீரமைக்க வேண்டும்.

நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு


க.சாந்தி, கவுன்சிலர் (தி.மு.க.,): அமைச்சரின் முயற்சியால் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குறிஞ்சி நகரிலிருந்து சீத்தப்பட்டிக்கு புதிதாக ரோடு போடப்பட்டுள்ளது. ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அங்கன்வாடிக்கும் புதிய கட்டடம் கட்டப்படும். பொன்னகரம் - கொல்லப்பட்டி இணைப்பு ரோடு உட்பட பல இடங்களில் புதிதாக ரோடு போடப்பட்டுள்ளது.

வார்டுக்குள் உள்ள பல இடங்களில் 500க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு தண்ணீர் ஊற்றி பாதுகாத்து வந்ததால் தற்போது அவை மரங்களாக மாறி உள்ளது. குறிஞ்சி நகரில் ரூ.45 லட்சத்தில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. சீத்தப்பட்டி பகுதியில் சாக்கடை பாலம் அமைக்கப்பட்டுள்ளது. குறிஞ்சி நகர் விரிவாக்க பகுதியில் ரோடு போடப்பட்டுள்ளது. பைபாஸ் ரோட்டுப் பகுதியில் இரவு நேரங்களில் இறைச்சி, உணவு கழிவுகளை கொட்டுகின்றனர்.

அவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். பைபாஸ் ரோட்டில் தெரு விளக்குகள் அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளோம். கூடலிங்கபுரம் ஓடையை துார்வாரி தடுப்புச் சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கூடலிங்கபுரத்தில் பொது சுகாதார வளாகம் விரைவில் அமைக்கப்படும். பல பகுதிகளில் புதிதாக எல்.இ. டி விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அடிக்கடி ஏற்படும் மின் துண்டிப்பு பிரச்சனைக்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஐஸ்வர்யா நகரில் புதிதாக சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us