ADDED : ஜூன் 10, 2024 01:19 AM
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு பகுதிகளில் சொர்ணாவரி நெல் சாகுபடி பயிர்களில் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால், வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆலோசனை வழங்கினர்.
சேத்தியாத்தோப்பு சுற்று வட்டார பகுதிகள் மற்றும் மேல் புவனகிரி வட்டாரங்களில் சொர்ணாவரி பருவத்தில் 2,760 ஹெக்டர் நெல் நடவு செயதுள்ளனர்.
நெற்பயிர்கள் நன்கு வளர்ந்துள்ள நிலையில் கடுமையான வெப்பம் காரணமாக செம்பேன், சிலந்தி தாக்குதல்கள் காணப்படுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் தகவலின்பேரில், புவனகிரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் முகமதுநிஜாம், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி நடராஜன், துணை வேளாண் அலுவலர் மணி, உதவி வேளாண் அலுவலர் சந்திரசேகர் ஆகியோர் பெரியநற்குணம், பு.ஆதனுார் ஆகிய வயல்வெளி பகுதிகளில் திடீர் ஆய்வு செய்தனர்.
நோய் தாக்குதலை கட்டுப்படுத்த, பிளாசாகுயின் 10 ஈசி, 400 மில்லி அல்லது ப்ரோப்பார்கைட் 400 மில்லி மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும் என, விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.