Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ முகாம் முடியும் முன்பே அதிகாரிகள் 'ஜூட்'; காத்திருந்த மலைவாழ் மக்கள் அவதி

முகாம் முடியும் முன்பே அதிகாரிகள் 'ஜூட்'; காத்திருந்த மலைவாழ் மக்கள் அவதி

முகாம் முடியும் முன்பே அதிகாரிகள் 'ஜூட்'; காத்திருந்த மலைவாழ் மக்கள் அவதி

முகாம் முடியும் முன்பே அதிகாரிகள் 'ஜூட்'; காத்திருந்த மலைவாழ் மக்கள் அவதி

ADDED : ஜூன் 27, 2025 11:17 PM


Google News
Latest Tamil News
தொண்டாமுத்தூர்; முள்ளாங்காட்டில் நடந்த தொல்குடி திட்டம் பழங்குடியினருக்கான சிறப்பு முகாமில், முகாம் முடியும் முன்பே, சில துறை அதிகாரிகள் புறப்பட்டு சென்றதால், நீண்ட நேரம் மலைவாழ் மக்கள் காத்திருந்தனர்.

மத்திய அரசு சார்பில், மலைவாழ் மக்களின் மேம்பாட்டுக்காக, பிரதான் மந்திரி ஜன் ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் மற்றும் தாத்ரி ஜன்ஜாதிய கிராம உத்கர்சியா ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்திட்டங்களின் கீழ், மலைவாழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நலத்திட்ட உதவிகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும், மாநில அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கும் வகையிலும், கோவை மாவட்டத்தில், 'தொல்குடி திட்டம் பழங்குடியினருக்கான சிறப்பு முகாம்' என்ற முகாம் மலை கிராமங்களில் நடத்தப்பட்டு வருகிறது. தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம், இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட முள்ளாங்காட்டில் உள்ள சமுதாயக் கூடத்தில், தொல்குடி திட்ட முகாம் நேற்று நடந்தது. தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காலை, 10:00 மணிக்கு துவங்கிய முகாமில், வருவாய்த்துறையினர், ஊராட்சி நிர்வாகம், வேளாண்மை துறை, குடிமையியல் துறை, மின்சார வாரியம் ஆகிய துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.

இடம் மற்றும் வீடு வழங்க கோரியும், புதிய ரேஷன் கார்டு வேண்டியும், ஆதாரில் முகவரி மாற்றம், கூடுதல் ரேஷன் அரிசி வழங்க வேண்டியும் என, ஏராளமான மனுக்கள் பெறப்பட்டன.

பழங்குடி மக்களுக்கான முகாமில், பழங்குடியின மக்கள் நலவாரிய அட்டைக்கு பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், ஏராளமான பொதுமக்கள், நலவாரிய அட்டைக்கு பதிவு செய்ய வந்திருந்தனர்.

ஆனால், அது தொடர்பான அதிகாரிகள் யாரும் வராததால், மதியம் 1:00 மணி வரை வெகு நேரம் காத்திருந்த பொதுமக்கள், ஊராட்சி நிர்வாக ஊழியர்களிடம் அதற்கான மனுவை அளித்துச் சென்றனர்.

இன்று, சாடிவயல் மலை கிராமத்தில், தொல்குடி திட்ட முகாம் நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us