ADDED : ஜூன் 02, 2024 11:33 PM
பெ.நா.பாளையம்;மானாவாரி சோளத்தை, வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழையையொட்டி விதைப்பு செய்யலாம் என, முன்னோடி விவசாயிகள் அறிவுரை கூறியுள்ளனர்.
கோடை மழையை பயன்படுத்தி, பயிர் அறுவடைக்கு பின், நிலத்தை சட்டி கலப்பை கொண்டு ஆழமாக உழவு செய்ய வேண்டும். பின்னர், ஒவ்வொரு மழைக்கு பின்பும், கலப்பை கொண்டு நிலத்தை உழுது விட வேண்டும். கோடை உழவினால் மண் அரிமானம் தடுக்கப்பட்டு, மழைநீர் சேமிக்கப்படுவதுடன், கோடை மழையில் முளைக்கும் களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. நிலத்தடியில் இருக்கும் கூட்டுக் புழுக்கள், உழவின் போது மேலே கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுவதால், பயிர் காலத்தில் பூச்சி தாக்குதல் குறையும்.வறட்சியை தாங்கி வளர மானாவாரி சோள விதைகளை கடினப்படுத்தி, பின்பு விதைக்க வேண்டும்.
மழை ஆரம்பிப்பதற்கு, 15 நாட்களுக்கு முன்பு விதைப்பதுதான் முன் பருவ விதைப்பு. விதைகளை கடினப்படுத்தி, 5 செ.மீ., ஆழத்தில் விதைக்க வேண்டும். அந்தந்த மாவட்டங்களில் மழை துவங்குவதை பொறுத்து, விதைக்கும் தருணம் வேறுபடும். உதாரணமாக, கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெரும்பாலும் செப்., 3ம் வாரத்தில் துவங்கும். ஆகவே இங்கு முதல் வாரத்தில் முன் பருவ விதைப்பு செய்யலாம்.
இவ்வாறு, முன்னோடி விவசாயிகள் கூறினர்.