Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோதவாடி குளத்துக்கு பி.ஏ.பி., நீர் வழங்க எதிர்பார்ப்பு! அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கோதவாடி குளத்துக்கு பி.ஏ.பி., நீர் வழங்க எதிர்பார்ப்பு! அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கோதவாடி குளத்துக்கு பி.ஏ.பி., நீர் வழங்க எதிர்பார்ப்பு! அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கோதவாடி குளத்துக்கு பி.ஏ.பி., நீர் வழங்க எதிர்பார்ப்பு! அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ADDED : ஜூன் 05, 2024 08:51 PM


Google News
Latest Tamil News
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, கோதவாடி குளத்தில் நீர் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

கிணத்துக்கடவு, கோதவாடி ஊராட்சியில் உள்ள குளம், 400 ஏக்கர் கொண்டதாகும். இதில், 100 ஏக்கர் வரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. குளத்தில் தற்போது நீர் இல்லை. செடி, கொடிகள் வளர்ந்து உள்ளது. சில இடங்களில் பெரிய அளவிலான முள் செடிகளுக்கும் காணப்படுகிறது.

இந்த குளத்தை மீட்டெடுக்க, பல அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் தாமாக முன்வந்து சீரமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததோடு, கோடை மழையும் பெரிய அளவில் இல்லை.

இதனால், பல இடங்களில் கடுமையான வறட்சி நிலவியது. சில விவசாயிகள் தங்கள் தோப்பில் உள்ள தென்னை மரங்களை வெட்டியுள்ளனர்.

கோதவாடியில், 400 ஏக்கர் அளவில் குளம் இருந்தும், தண்ணீர் பிரச்னை அதிகரித்து வந்தது. கிணத்துக்கடவு ஒன்றியங்களுக்கு உட்பட்ட பல கிராமங்கள் விவசாயம் சார்ந்த பகுதியாகவே இருப்பதால், இந்த குளத்தில் தண்ணீர் நிரப்ப, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து, ஊராட்சி தலைவர் ரத்தினசாமி கூறியதாவது:

கோதவாடி குளத்தில், முந்தய காலத்தில் நீர் வரத்து அதிகமாக இருந்தது. இதனால், குளத்தை நீர் ஆதாரமாக கொண்ட பகுதியில், வாழை, வெற்றிலை, தென்னை, நெல் போன்றவை நடவு செய்யப்பட்டது.

குளப்பகுதி முழுவதும் நீர் நிரம்பி, பசுமையாகவே காணப்பட்டது. சுற்றுலா பயணியர் வந்து சென்றனர். ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறி விட்டது. நீர் பாசனம் செய்த நிலம் எல்லாம், இப்போது மானாவாரியாக மாறி விட்டது.

மழையும் பொய்த்து போனது, அரசும் கண்டுகொள்ளவில்லை. இதனால் விவசாயிகள் தண்ணீர் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர்.

பச்சார்பாளையம் மெயின் கால்வாயில் இருந்து, கோதவாடி குளம் வரை கால்வாய் அமைக்க வேண்டும். இதற்கு அரசாணை வெளியிட வேண்டும். தனியாருக்கு டெண்டர் விட்டு, கால்வாய் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். கால்வாய்க்காக வெட்டி எடுக்கும் மணலை, கட்டுமான பணிக்கு பயன்படுத்தலாம். இதனால் அரசுக்கு ஏற்படும் செலவினத்தில் ஒரு பகுதி குறையும்.

பி.ஏ.பி., திட்டத்தில், ஆழியாறு அணையில் இருந்து, கேரளாவுக்கு ஆண்டு தோறும், 7.25 டி.எம்.சி., தண்ணீர் செல்கிறது. அதில் ஒரு பகுதி நீரை, திருமூர்த்தி அணைக்கு கொண்டு சென்று, பிரதான கால்வாய் வாயிலாக, கோதவாடி குளம், நீரோடை, குருநல்லிபாளையம், கோடங்கிபாளையம், சூலக்கல், புரவிபாளையம், நடுப்புணி போன்ற கிராமங்கள் வழியாக கொண்டு சென்று, கேரளாவுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன் வாயிலாக, பல கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி அடையும். மேலும், இப்பகுதி முழுவதும் வளர்ச்சி அடையும். விவசாயிகள் நலன் கருதி இத்திட்டத்துக்கு அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us