/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மூதாட்டியை ஏமாற்றி பணம் பறித்த மோசடி நபரை தாக்கிய ஐவர் கைது மூதாட்டியை ஏமாற்றி பணம் பறித்த மோசடி நபரை தாக்கிய ஐவர் கைது
மூதாட்டியை ஏமாற்றி பணம் பறித்த மோசடி நபரை தாக்கிய ஐவர் கைது
மூதாட்டியை ஏமாற்றி பணம் பறித்த மோசடி நபரை தாக்கிய ஐவர் கைது
மூதாட்டியை ஏமாற்றி பணம் பறித்த மோசடி நபரை தாக்கிய ஐவர் கைது
ADDED : செப் 19, 2025 12:38 AM
திருவேற்காடு, இ.சி.ஆர்., சாலையில், வீடு வாங்கி தருவதாக கூறி மூதாட்டியிடம் 85 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை கடத்தி, தாக்கிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவேற்காடு, சுந்தரசோழபுரத்தைச் சேர்ந்தவர் வைரவேல், 29; 'டிராவல்ஸ்' நிறுவனம் நடத்தி வருகிறார். இம்மாதம் 16ம் தேதி இரவு, இவரை காரில் கடத்தி சென்றதாக, அவரது பெற்றோர் திருவேற்காடு போலீசில் புகார் அளித்தனர்.
விசாரணையில், திருமுல்லைவாயிலில் கஜேந்திரன், 59, என்பவரது ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் அவரை அடைத்து வைத்திருப்பது தெரிந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற திருவேற்காடு போலீசார், வைரவேலை பத்திரமாக மீட்டனர்.
விசாரணையில், இ.சி.ஆரில் வீடு வாங்கி தருவதாக கூறி, ஆவடியைச் சேர்ந்த ராவூத் பசாரி, 65, என்ற மூதாட்டியை ஏமாற்றி 85 லட்சம் ரூபாய் பறித்ததால் வைரவேலுவை கடத்தியது தெரிந்தது.
வைரவேலுவை கடத்திய வழக்கில் திருமுல்லைவாயில் பகுதியைச் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் கஜேந்திரன், 59, அவரது கார் ஓட்டுநர் சிவபிரசாத், 32, திருவேற்காடைச் சேர்ந்த வழக்கறிஞர் ரிஷிகுமார், 27, நவீன்குமார், 26, மற்றும் முகேஷ், 24, ஆகியோரை, நேற்று கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய 'மாருதி ஸ்விப்ட்' காரை பறிமுதல் செய்தனர்.
ராவூத் பசாரியிடம் 85 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், ஆவடி போலீசார், வைரவேலையும் கைது செய்தனர்.
இச்சம்பவம் குறித்து, போலீசார் கூறியதாவது:
இ.சி.ஆர்., சாலையில் ஒரு வீட்டை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக, மத்திய திரைப்பட தணிக்கை துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற, ஆவடி அடுத்த அயில்சேரியைச் சேர்ந்த ராவூத்பசாரி, 65, என்பவரை, வைரவேல் அணுகியுள்ளார். அதை நம்பிய ராவூத் பசாரி, 150 சவரன் நகையை விற்று பல்வேறு தவணைகளாக 85 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.
சில நாட்களுக்கு முன், வெளிநாட்டில் இருந்து வந்த அவரது மகள், நகை குறித்து கேட்டபோது, இ.சி.ஆர்., சாலையில் வீடு வாங்க கொடுத்துள்ளதாக, ராவூத் பசாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மகள் விசாரித்தபோது, அந்த வீடு விற்பனைக்கு இல்லை என்பது தெரிந்தது. இதையடுத்து மகள், தனக்கு தெரிந்த கஜேந்திரன் உதவியை நாடியுள்ளார். அவர், தன் அலுவலகத்திற்கு வைரவேலை கடத்தி சென்று அடித்து உதைத்துள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.