Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தாய் - தம்பியை கொடூரமாக கொன்ற மகன் நன்றாக படி என்றதால் ஆத்திரம்

தாய் - தம்பியை கொடூரமாக கொன்ற மகன் நன்றாக படி என்றதால் ஆத்திரம்

தாய் - தம்பியை கொடூரமாக கொன்ற மகன் நன்றாக படி என்றதால் ஆத்திரம்

தாய் - தம்பியை கொடூரமாக கொன்ற மகன் நன்றாக படி என்றதால் ஆத்திரம்

ADDED : ஜூன் 22, 2024 11:33 PM


Google News
Latest Tamil News
சென்னையில், : சென்னையில் தாய், தம்பியைக் கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்து, பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைத்த கல்லுாரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூர், திருநகர் 1வது தெருவைச் சேர்ந்த முருகன், 50. இவர், ஓமன் நாட்டில் கிரேன் ஆப்ரேட்டராக உள்ளார். இவரது மனைவி பத்மா, 45. இவர், அண்ணா சாலையில் உள்ள அக்குபஞ்சர் கிளினிக்கில் பிசியோதெரபிஸ்டாக வேலை பார்த்தார். இவர்களது மகன்கள் நித்தேஷ், 20, சஞ்சய், 14.

தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., படிக்கும் மாணவர் நித்கும் தனது வீட்டருகே வசிக்கும் பெரியம்மா மகள் மகாலட்சுமியின் மொபைல் போனிற்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதை, நேற்று அதிகாலை பார்த்துள்ளார். அதில், 'அக்கா உன் வீட்டிற்கு வெளியே ஒரு பை உள்ளது; அதை எடுத்து பார்' என குறிப்பிடப்பட்டிருந்தது.

அவர் பார்த்தபோது, நித்தேஷின் மொபைல் போன், வீட்டு சாவி, சிறிய அளவிலான டேப் இருந்தது. உடனடியாக, சாவியை எடுத்துக் கொண்டு, நேற்று காலை பத்மாவின் வீட்டிற்கு சென்று கதவை திறந்து பார்த்தபோது, கடும் துர்நாற்றம் வீசியது. அங்கு பத்மா மற்றும் இளைய மகன் சஞ்சய் ஆகியோர் கொலை செய்யப்பட்டு, பிளாஸ்டிக் கவரில் மூட்டையாக கட்டி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

திருவொற்றியூர் போலீசார் உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சக்திவேல் தலைமையில், தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் கரிகாலன் வரவழைக்கப்பட்டு, விசாரணை துரிதப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், திருவொற்றியூர், மஸ்தான் கோவில் அருகே சுற்றித்திரிந்த நித்தேஷை, போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

'திடுக்' தகவல்


போலீசாரின் விசாரணையில் நித்தேஷ் அளித்த வாக்குமூலம்:

அப்பாவும், அம்மாவும் வேலைக்கு சென்று எங்களை படிக்க வைத்தனர். நன்றாக படித்து, குடும்ப கஷ்டத்தை போக்க நினைத்தேன்.

ஆனால், கல்லுாரியில் 14 பாடங்களில் தோல்வி அடைந்தேன். இதை அம்மா கண்டித்தார்; தொடர்ந்து நச்சரித்து வந்தார்; கடும் மன அழுத்தம் ஏற்பட்டது. இதனால், ஒருமுறை வீட்டை விட்டு வெளியேறினேன். தொடர்ந்து அவர் நச்சரிக்கவே, என்னால் படிப்பிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.

தம்பி அனாதையாகி விடுவான் என்பதற்காக, அவனையும் கொலை செய்ய திட்டமிட்டு, சில மாதங்களுக்கு முன் கத்தி, பிளாஸ்டிக் கவர், டேப் உள்ளிட்டவற்றை வாங்கி வந்து வீட்டில் வைத்தேன்.

இரு தினங்களுக்கு முன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இருவரையும், கத்தியால் குத்தி கொலை செய்து, பிளாஸ்டிக் கவரில் மூட்டையாக கட்டி, வீட்டின் வரவேற்பறையில் வைத்து பூட்டினேன்.

பின், அம்மாவின் மொபைல் போனில் இருந்து, 10,000 ரூபாய் எடுத்து, நண்பர்களுடன் மாமல்லபுரம் சென்று செலவழித்தேன். ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொள்ளலாம் என முடிவு செய்து, பயத்தில் வந்து விட்டேன்.

கொலை நடந்து இரு நாட்களாகியும் வெளியில் தெரியாததால், அக்காவை உஷார்படுத்தினேன். தொடர்ந்து, போலீசார் என்னை கைது செய்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மனைவி, இளைய மகன் கொலையான சம்பவம் அறிந்து, ஓமன் நாட்டில் இருக்கும் முருகன், இன்று அதிகாலை, விமானம் வாயிலாக, சென்னை வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us