Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மெரினா கடற்கரையில் 'பார்க்கிங்' மாநகராட்சியே வசூலிக்க கோரிக்கை

மெரினா கடற்கரையில் 'பார்க்கிங்' மாநகராட்சியே வசூலிக்க கோரிக்கை

மெரினா கடற்கரையில் 'பார்க்கிங்' மாநகராட்சியே வசூலிக்க கோரிக்கை

மெரினா கடற்கரையில் 'பார்க்கிங்' மாநகராட்சியே வசூலிக்க கோரிக்கை

ADDED : ஜூன் 03, 2024 01:53 AM


Google News
அண்ணா சதுக்கம்:பல்வேறு முறைகேடுகளை தடுக்க, மெரினா கடற்கரை 'பார்க்கிங்' கட்டணத்தை தனியாரிடம் ஒப்பந்தம் விடாமல், சென்னை மாநகராட்சியே எடுத்து நடத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னை மக்களுக்கும், வெளிநாட்டு சுற்றுலா பயணியருக்கும் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக, மெரினா கடற்கரை விளங்குகிறது.

மெரினா கடற்கரைக்கு தினமும் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

பலர் 'பைக், கார்'களில் வருகின்றனர். சுற்றுலா பயணியர் பேருந்து, வேன்களில் வந்து செல்கின்றனர். மெரினா கடற்கரைக்கு வரும் வாகனங்களை ஒழுங்குபடுத்தி, 'பார்க்கிங்'கில் நிறுத்துவதற்கான பணியை, சென்னை மாநகராட்சி நிர்வாகம் தனியாரிடம் ஒப்படைத்துள்ளது.

ஆனால், தனியார் நிறுவனம் பார்க்கிங் கட்டணத்தை முறைப்படி வாங்காமல், அதிகம் வசூல் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், தனியார் நிறுவனம் ஒன்று, மாநகராட்சியிடம் பார்க்கிங் கட்டணம் ஒப்பந்தம் போட்டது.

ஆனால், இந்த ஒப்பந்தம் முடிந்ததாக தெரிகிறது. ஆனாலும், அந்த தனியார் நிறுவனம், தொடர்ந்து அதிக கட்டணம் வசூல் செய்வதாக, சுற்றுலா பயணியர் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறிப்பாக கட்டணம் வசூல் செய்ததற்கான ரசீது தருவதில்லை எனக் கூறப்படுகிறது. பைக்குகளுக்கு 15 ரூபாய் கட்டணம் வாங்க வேண்டும். ஆனால் கூடுதலாக 15 ரூபாய் என, 30 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. கார், வேன் போன்ற வாகனங்களுக்கு 100 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது.

இதனால், வெளிநாட்டு சுற்றுலா பயணியர் அதிருப்தி அடைகின்றனர். பொதுமக்கள் கேள்வி கேட்டால், கட்டணம் வசூல் செய்யும் தனியார் ஊழியர்கள், சரியாக பதில் கூறாமல் அடாவடி செய்வதாகவும் கூறுகின்றனர்.

எனவே, ஒப்பந்தம் முடிந்தும் அதை மீண்டும் புதுப்பிக்காமல், மெரினா கடற்கரையில் அடாவடி கட்டணம் வசூல் செய்யப்படுவதை, உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும்.

மேலும், இனி பார்க்கிங் ஒப்பந்தத்தை தனியாரிடம் கொடுக்காமல், சென்னை மாநகராட்சியே எடுத்து நடத்த வேண்டும் என, சுற்றுலா பயணியர், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us