/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சுகாதார சீர்கேடில் பெசன்ட் நகர் கடற்கரை சுகாதார சீர்கேடில் பெசன்ட் நகர் கடற்கரை
சுகாதார சீர்கேடில் பெசன்ட் நகர் கடற்கரை
சுகாதார சீர்கேடில் பெசன்ட் நகர் கடற்கரை
சுகாதார சீர்கேடில் பெசன்ட் நகர் கடற்கரை
ADDED : ஜூன் 12, 2024 12:38 AM

பட்டினப்பாக்கம்,மற்ற கடற்கரை பகுதிகளைப் போல பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர் கடற்கரையையும் குப்பை கூளம் இல்லாமல் அழகுப்படுத்த வேண்டும் என, மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை எண்ணூர் முதல் கோவளம் வரை கடற்கரையை அழகுப்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. காசிமேடு மீன்பிடி துறைமுகம், எண்ணூர் கடற்கரை பகுதிகள் புதர் மண்டி கிடந்தன. தற்போது அங்குள்ள புதர்கள் அகற்றப்பட்டு, தடுப்பு வேலிகள் அமைத்து வருகின்றனர்.
கடற்கரையை அழகுப்படுத்தும் விதமாக அந்த பகுதிகளில் சிறிய அளவில் பூங்காக்கள், நடைப்பாதைகள், சைக்கிள் தடங்கள், ஷாப்பிங் ஏரியா, திறந்தவெளி உடற்பயிற்சி கூடங்கள் அமைத்து அழகுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரைக்கு தினம்தோறும் ஆயிரகணக்கில் பொதுமக்கள், சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். அவர்கள் பயன்படுத்திய திண்பண்ட காகிதங்கள், அட்டைகள், காலி குளிர்பான பாட்டில்கள் உள்ளிட்டவற்றை மணற்பரப்பில் போட்டு செல்கின்றனர்.
மெரினாவில் குப்பைகளை அகற்றுவதற்கு, தனியாருக்கு சென்னை மாநகராட்சி ஒப்பந்தம் அளித்துள்ளது. இதனால் தினமும் காலையில் மெரினாவில் சேரும் குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படுகிறது. மேலும், மணற்பரப்பில் பல்வேறு இடங்களில் குப்பை தொட்டிகளை வைத்து பராமரித்து வருகிறது.
ஆனால், பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர் கடற்கரைகளில், சுற்றுலா பயணியர் அதிகம் வருவர். அவர்கள் விட்டு செல்லும் குப்பையை சுத்தம் செய்வதற்கு ஆள் இல்லை.
விடுமுறை நாட்களில் பட்டினப்பாக்கம், பெசன்ட்நகர் கடற்கரை பகுதிகளில் குப்பைகள் குவிந்து, இப்பகுதி அசுத்த கோலத்துடன் காணப்படுகின்றன. நாய்கள் தொல்லை அதிகரித்து பொது மக்களுக்கு அபாயகரமாக மாறியுள்ளது. மற்ற கடற்கரைகளை போன்று பெசன்ட் நகரை சீரமைக்க கோரிக்கை வலுத்துள்ளது.