/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பெயின்ட் ஆலையில் பயங்கர தீ பல கோடி மதிப்பு பொருட்கள் நாசம் பெயின்ட் ஆலையில் பயங்கர தீ பல கோடி மதிப்பு பொருட்கள் நாசம்
பெயின்ட் ஆலையில் பயங்கர தீ பல கோடி மதிப்பு பொருட்கள் நாசம்
பெயின்ட் ஆலையில் பயங்கர தீ பல கோடி மதிப்பு பொருட்கள் நாசம்
பெயின்ட் ஆலையில் பயங்கர தீ பல கோடி மதிப்பு பொருட்கள் நாசம்
ADDED : ஜூன் 17, 2024 02:10 AM

மணலி புதுநகர்:மணலிபுதுநகர் அருகே, பெயின்ட் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின. தீயணைக்கும் பணியில் 120க்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
பெரம்பூர், பெரியார் நகரைச் சேர்ந்தவர் தனபால், 50. இவருக்கு, மணலிபுதுநகர் அடுத்த விச்சூர் - சிப்காட் நிறுவன வளாகத்தில், 'ரூபி பெயின்ட், 'ஸ்ரீ முருகன் பெயின்ட்' என்ற பெயரில் நிறுவனங்கள் உள்ளன.
இந்நிறுவனங்களில் இருந்து, நேற்று மதியம் 1:00 மணியளவில் திடீரென கரும்புகை வெளியேறியது.
தகவல் அறிந்த வடசென்னை மாவட்ட அலுவலர் லோகநாதன் தலைமையில், மணலி, மாதவரம், திருவொற்றியூர், எண்ணுார் என, சென்னை சுற்றுவட்டாரத்தில் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களுடன் 120 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், பெயின்ட் உள்ளிட்ட ரசாயன பொருட்களாலும், காற்றின் வேகம் காரணமாகவும், தீ கொழுந்துவிட்டு எரிய துவங்கியது. சற்று நேரத்தில், 15,000 சதுர அடியிலான இரண்டடுக்கு கட்டடம் முழுதும் ஆர்ப்பரித்து எரிந்துக் கொண்டிருந்தது.
இதைத்தொடர்ந்து, தீயணைப்பு துறையினர், 150 அடி உயரமுள்ள, மூன்று 'ஸ்கை லிப்ட்' இயந்திரங்களை சம்பவ இடத்திற்கு வரவழைத்து, தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இரவு 8:00 மணி நிலவரப்படி, பாதி கட்டடத்தின் தீ முழுதும் அணைக்கப்பட்டது. இன்று மதியம் வரை, தீ அணைக்கும் பணி, மீட்பு பணிகள் நடக்கும் என, வீரர்கள் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்தில், 'இரு நிறுவனங்களிலும் பெயின்ட் தயாரிப்பிற்காக வைக்கப்பட்டிருந்த மூலப்பொருட்கள் மற்றும் தயார் செய்து வைக்கப்பட்டிருந்த பெயின்ட் பீப்பாய்கள் எரிந்து நாசமாயிருக்கலாம் எனவும், அதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கக் கூடும்' என, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்து காரணமாக, மூச்சு திணறல், கண் எரிச்சல் ஏற்படவே, சிப்காட் வளாகத்தில் தங்கி வேலை பார்த்த வடமாநில தொழிலாளர்கள், கூட்டம் கூட்டமாக வெளியேறினர். ஒரு கி.மீ., துாரத்திற்கு கரும்புகை கிளம்பியதால், சுற்றுவட்டார பகுதி முழுதும் இருள் சூழ்ந்தது போன்று காட்சியளித்தது.
சம்பவம் குறித்து, மணலிபுதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.