/உள்ளூர் செய்திகள்/சென்னை/பட்டா பெயர் மாற்றும் மனுக்கள் தேக்கம்...குளறுபடி!:வருவாய் துறை புதிய திட்டத்தால் சிரமம்பட்டா பெயர் மாற்றும் மனுக்கள் தேக்கம்...குளறுபடி!:வருவாய் துறை புதிய திட்டத்தால் சிரமம்
பட்டா பெயர் மாற்றும் மனுக்கள் தேக்கம்...குளறுபடி!:வருவாய் துறை புதிய திட்டத்தால் சிரமம்
பட்டா பெயர் மாற்றும் மனுக்கள் தேக்கம்...குளறுபடி!:வருவாய் துறை புதிய திட்டத்தால் சிரமம்
பட்டா பெயர் மாற்றும் மனுக்கள் தேக்கம்...குளறுபடி!:வருவாய் துறை புதிய திட்டத்தால் சிரமம்
ADDED : ஜூன் 17, 2024 02:09 AM

சென்னை மாவட்டத்தில், பட்டா பெயர் மாற்றத்தை எளிமையாக்க, 'முதலில் வருவோருக்கு முதலில் சேவை' எனும் திட்டம், வருவாய் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில், நேரடி பட்டா மற்றும் உட்பிரிவு பட்டா ஆகிய இரண்டுக்கும் ஒரே தரவரிசை அளிக்கப்பட்டு உள்ளதால், பட்டா பெயர் மாற்றம் செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால், வங்கிக் கடன், வீடு கட்டுமான வரைபடத்திற்கு அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில், 16 தாலுகாக்கள் உள்ளன. இவற்றில், முழு நிலத்திற்கான பட்டா பெயர் மாற்றம் செய்ய, வி.ஏ.ஓ., மற்றும் துணை வட்டாட்சியர் ஒப்புதலுடன் வழங்கப்படுகிறது. இதற்கு, 15 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்படுகிறது.
அதேபோல், ஒரு நிலத்தை பகுதி பகுதியாக பிரித்து, வேறு வேறு ஆட்களுக்கு விற்கப்படும் நிலத்திற்கு, உட்பிரிவு அடிப்படையில் பட்டா வழங்கப்படும்.
இந்த உட்பிரிவு பட்டா, நில அளவை துணை ஆய்வாளர், நில அளவையர் மற்றும் தாசில்தார் ஒப்புதலுடன் வழங்கப்படுகிறது. இதற்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது.
வேலைப்பளு மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறையால், குறுகிய காலத்தில் வழங்குவதில் சிக்கல் ஏற்படுவதாக, வருவாய் துறை ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, 30ல் இருந்து 60 நாட்களாக மாற்றப்பட்டது. பின், 45 நாட்களாக குறைக்கப்பட்டது.
பட்டா வழங்குவதில் பல்வேறு குறைபாடு இருந்தது. பணம் கொடுப்போருக்கு விரைவாக பட்டா வழங்குவதும், மற்றவர்களின் மனுக்களை கிடப்பில் போடுவதும் என, பல தாலுகாக்களில் தற்போதும் இந்த பிரச்னை நிலவுகிறது.
இந்நிலையில், முறைகேடு தடுக்கவும், பட்டா பெயர் மாற்றம், உட்பிரிவு அளவு மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், 'பஸ்ட் இன் பஸ்ட் அவுட்' எனும் 'முதலில் வருவோருக்கு முதலில் சேவை' என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இதில், நேரடியாக பட்டா பெயர் மாற்றம் மற்றும் உட்பிரிவு அளந்து பட்டா பெயர் மாற்றம் செய்யப்படுவது, ஒரே தரவரிசையில் கொண்டுவரப்பட்டு உள்ளது. 'ஆன்லைன்' மனுக்களின் தரவரிசை அடிப்படையில், பட்டா வழங்கும் முறையில், முதலில் வரும் மனுவுக்கு தீர்வு காணப்பட்ட பின், அடுத்த மனுவிற்கான வேலைகளில் ஈடுபட வேண்டும். இந்த திட்டத்தில் சிக்கல் இருப்பதாக, பயனர்கள் புகார் கூறுகின்றனர்.
அதாவது, நேரடி பட்டா பெயர் மாற்றம் மற்றும் உட்பிரிவு அளந்து பட்டா வழங்குவதை, ஒரே வரிசையில் கொண்டு வந்ததால், நேரடி பட்டா பெயர் மாற்றம் செய்வதில் காலதாமதம் ஏற்படுவதாக, அவர்கள் புகார் கூறுகின்றனர்.
உதாரணமாக, ஒரு தாலுகாவில், உட்பிரிவு அளந்து பட்டா பெயர் மாற்றத்திற்கு வழங்கியவர், 'ஆன்லைன்' மனு எண் - 5, நேரடி பட்டா பெயர் மாற்ற வழங்கியவர் மனு எண் - 6 என பதிவாகும். அப்போது, மனு எண் - 5 முடித்து வைத்த பின் தான், 6வது மனுவை பரிசீலிக்க வேண்டும்.
நேரடி பட்டா பெயர் மாற்றம், ஒரே நாளில் முடிந்து விடும். ஆனால், உட்பிரிவு பட்டா வழங்க, பதிவு ஆவணம், முந்தைய ஆவணங்கள் அடிப்படையில் அளவை மேற்கொள்ள வேண்டும். இதற்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட நாட்கள் ஆகும்.
அதேபோல், வழக்கமான பணிகளை தவிர்த்து தாசில்தார், நில அளவையர், சம்பந்தப்பட்ட நிலத்தில் அளவீடு செய்ய செல்ல வேண்டும். இதனால், பெரும்பாலான உட்பிரிவு பட்டா பெயர் மாற்றம், 10 முதல் 20 நாட்கள் வரை தாமதமாகிறது.
மனு வரிசைப்படி பரிசீலிப்பதால், நேரடி பெயர் மாற்றம் கேட்டு விண்ணப்பிப்போரின் மனுக்கள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால், வங்கிக் கடன், வீடு கட்ட வரைபடம் அனுமதி வாங்குவது உள்ளிட்ட தேவைகளை குறிப்பிட்ட கால அவகாசத்தில் முடிக்க முடியாமல், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
மோசடி புகார்கள்
சென்னையில் ஒவ்வொரு தாலுகாவிலும், பட்டா மனுக்கள் மட்டும், மாதம் 400 முதல் 600 வரை வருகின்றன. 50 முதல் 100 மனுக்கள் வரும் சிறிய தாலுகாவுக்கு பிரச்னை இல்லை.
ஆனால், சென்னை விரிவாக்க அம்பத்துார், சோழிங்கநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் அதிகம். இத்தாலுகாக்களில் நடந்துள்ள பட்டா மோசடி புகார்களால், உட்பிரிவுடன் பட்டா கேட்கும் மனுக்கள் மீது, கள ஆய்வு செய்யும்போது தீவிர விசாரணை தேவைப்படும். தவறு நடந்தால், நாங்கள் நீதிமன்றத்திற்கு பதில் கூற வேண்டும். இத்திட்டத்தில், நேரடி பட்டா பெயர் மாற்றத்திற்கு ஒரு தரவரிசை எண்ணும், உட்பிரிவு பட்டா வழங்க வேறு தரவரிசை எண்ணும் வழங்கினால், பணி எளிதாக இருக்கும். நிலுவை மனுக்களை உடனுக்குடன் முடிக்க முடியும். பொதுமக்களும் பயனடைவர்.
- வருவாய் துறை அதிகாரிகள்
மனுக்கள் தேங்கும்
முதலில் வருவோருக்கு முதல் சேவை திட்டத்தால், இடைத்தரகர்கள் தலையீடு தடுக்கப்படும்; பணப்புழக்கம் குறையும். அதேநேரம், உட்பிரிவு பட்டா வழங்கும் மனு நிலுவையில் இருந்தால், நேரடி பட்டா பெயர் மாற்றத்திற்கான மனுக்கள் கிடப்பில் போடப்பட்டு, தேங்கும் நிலை உள்ளது. இதனால் வங்கிக் கடன், வீடு கட்டும் பணி காலதாமதம் ஏற்படுகிறது. இத்திட்டத்தில் நேரடி பட்டா வழங்க தனி வரிசை, உட்பிரிவு பட்டாவிற்கு தனி வரிசை வழங்க, உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பொதுமக்கள்
- நமது நிருபர் -