Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி வழிப்பறி வழக்கில் திடீர் திருப்பம் நிதி நிறுவன ஊழியரின் தில்லாலங்கடி அம்பலம்

புதுச்சேரி வழிப்பறி வழக்கில் திடீர் திருப்பம் நிதி நிறுவன ஊழியரின் தில்லாலங்கடி அம்பலம்

புதுச்சேரி வழிப்பறி வழக்கில் திடீர் திருப்பம் நிதி நிறுவன ஊழியரின் தில்லாலங்கடி அம்பலம்

புதுச்சேரி வழிப்பறி வழக்கில் திடீர் திருப்பம் நிதி நிறுவன ஊழியரின் தில்லாலங்கடி அம்பலம்

ADDED : செப் 13, 2025 09:15 AM


Google News
புதுச்சேரி : குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தியதை மறைக்க, வழிப்பறி நாடகமாடிய நிதி நிறுவன ஊழியர் மீது வழக்குப் பதிவு செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

புதுச்சேரி, வில்லியனுார் அடுத்த கூடப்பாக்கத்தை சேர்ந்தவர் ஹரிஷ்மணி,25; தனியார் நிதி நிறுவன ஊழியர். இவர், கடந்த 6ம் தேதி பாகூரில் எஸ்.பி., தலைமையில் நடந்த மக்கள் மன்றத்தில் மனு அளித்தார்.

அதில், கடந்த 31ம் தேதி நள்ளிரவு வேலை முடித்துவிட்டு, கடலுாரில் உள்ள பாட்டி வீட்டிற்கு பைக்கில் தவளக்குப்பத்தை கடந்து சென்றபோது, பின்னால் வந்த மர்ம நபர், என்னை தாக்கினார். அதில், மயக்கமடைந்து கீழே விழுந்தேன். கண் விழித்தபோது, புதுச்சேரி சுப்பையா சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே கையில் காயங்களுடன் கிடந்தேன். எனது கே.டி.எம்., பைக், நான் அணிந்திருந்த ஒரு சவரன் மோதிரம், ரொக்கம் ரூ.1,500 திருடு போயிருந்தது. என்னை தாக்கி, பணம், நகை மற்றும் பைக்கை கொள்ளை அடித்து சென்றவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார்.

புகாரை கடந்த 8ம் தேதி பதிவு செய்த அரியாங்குப்பம் போலீசார், ஹரிஷ் மணி மயங்கி கிடந்த இடம் ஒதியஞ்சாலை போலீஸ் எல்லைக்கு உட்பட்டது என்பதால், வழக்கை ஒதியஞ்சாலை போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றினர்.

இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ஹரிஸ்மணி மயங்கி கிடந்ததாக கூறப்பட்ட பெட்ரோல் பங்க் மற்றும் தாக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தில் இருந்த சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்ததில், தாக்குதல் சம்பவம் நடக்கவில்லை என்பது தெரிய வந்தது.

சந்தேகமடைந்த போலீசார், ஹரிஷ்மணியின் பைக் பதிவெண்ணை வைத்து விசாரித்தனர். அதில், ஹரிஷ்மணி தாக்கப்பட்டதாக கூறப்பட்ட அதே நாளில், கடலுார் - புதுச்சேரி சாலையில், கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்க்குப்பத்தில் உள்ள பல்பொருள் அங்காடி அருகே, முன்னாள் சென்ற குருவிநத்தம் கிராமத்தை சேர்ந்த வாழுமுனி,45; என்பவரின் பைக் மீது, குடிபோதையில் வாலிபர் ஒருவர் கே.டி.எம்., பைக்கால் மோதியுள்ளார். இருவரும் கீழே விழுந்து அடிபட்டுள்ளனர்.

அவர்களை, அங்கிருந்தவர்கள் மீட்டு, பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு, வழுமுனி சிகிச்சை பெற்றார். விபத்தை ஏற்படுத்திய வாலிபர் சிகிச்சை பெறாமல் தப்பிச் சென்றார்.

இந்த விபத்து குறித்து வாழுமுனி, கடந்த 11ம் தேதி கொடுத்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில், விபத்து ஏற்படுத்தியவர் பைக்கை அங்கேயே போட்டுவிட்டு சென்றது தெரிய வந்தது. பைக் பதிவெண்ணை ஆய்வு செய்ததில், ஹரிஷ் மணிக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது.

இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ஹரிஷ்மணியை அழைத்து விசாரித்தபோது, அவரது முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்தார். போலீசார் கிடுக்குப்பிடி விசாரணையில், ஹரிஷ்மணிக்கு குடி பழக்கம் உள்ளது. அது வீட்டிற்கு தெரியாது. கடந்த 31ம் தேதி இரவு வேலை முடித்துவிட்டு, நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியவர், வீட்டிற்கு சென்றால் தெரிந்துவிடும் என்பதால், கடலுாரில் உள்ள பாட்டி வீட்டிற்கு பைக்கில் சென்றபோது, போதையில் விபத்து ஏற்படுத்தி உள்ளார்.

விபத்தில் சிக்கியது வீட்டிற்கு தெரிந்தால், தான் குடிப்பது தெரிந்துவிடும் என்பதால், தன்னை யாரோ தாக்கி பைக், நகை, பணத்தை கொள்ளை அடித்து சென்றதாக புகார் அளித்தது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து ஒதியஞ்சாலை போலீசார், ஹரிஷ்மணி கொடுத்த புகார் மீது பதிவு செய்த வழக்கை ரத்து செய்துவிட்டு, பொய் புகார் கொடுத்தது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us