ADDED : ஜூலை 14, 2024 10:58 PM
புதுச்சேரி: ரெயின்போ நகரில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் உயிரிழந்தார். காண்ட்ராக்டர் மற்றும் வீட்டின் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வில்லியனுார் ஜி.என்.பாளையம், அய்யனார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் குணசேகரன், 26; எலக்ட்ரீஷியன். கதிர்காமம் எலக்ட்ரிக்கல் கான்ட்ராக்டர் முருகன் என்பவரிடம் வேலை செய்து வந்தார்.
முருகன் கூறியதால், ரெயின்போ நகர் 7 வது குறுக்கு தெருவில் ஒரு வீட்டில் கிரக பிரவேசத்திற்காக அலங்கரித்து போடப்பட்டு இருந்த சீரியல் விளக்குகளை கழற்ற சென்றார்.
நேற்று முன்தினம் காலை சீரீயல் விளக்குகளை குணசேகரன் அகற்றியபோது, மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டார்.
மயங்கி கிடந்த குணசேகரனை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து இறந்து விட்டதாக தெரிவித்தார்.
குணசேகரன் இறப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது சகோதரர் ஏழுமலை அளித்த புகாரின்பேரில், காண்ட்ராக்டர் முருகன், வீட்டின் உரிமையாளர் நவநீத்சவுத்ரி ஆகியோர் மீது பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.