Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ அமைச்சர்கள் கோஷ்டி மோதலால் கொடையில் முடங்கிய கோடை விழா

அமைச்சர்கள் கோஷ்டி மோதலால் கொடையில் முடங்கிய கோடை விழா

அமைச்சர்கள் கோஷ்டி மோதலால் கொடையில் முடங்கிய கோடை விழா

அமைச்சர்கள் கோஷ்டி மோதலால் கொடையில் முடங்கிய கோடை விழா

UPDATED : மே 26, 2025 07:05 AMADDED : மே 26, 2025 02:27 AM


Google News
Latest Tamil News
சென்னை: அமைச்சர்கள் கோஷ்டி மோதல் காரணமாக, கொடைக்கானல் கோடை திருவிழா களையிழந்ததால், தோட்டக்கலை துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், சேலம் மாவட்டம் ஏற்காடு உள்ளிட்ட இடங்களில், தோட்டக்கலைத்துறை பூங்காக்கள் மற்றும் பண்ணைகள் உள்ளன. இங்கு அரிய வகை மரங்கள், பூச்செடிகள் உள்ளிட்டவை பராமரிக்கப்பட்டு வருகின்றன.

ஆண்டுதோறும், மே மாதம் பூங்காக்களில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். இதையொட்டி, மலர் கண்காட்சி, பழக்கண்காட்சி, வாசனை பொருட்கள் கண்காட்சி உள்ளிட்டவை நடத்தப்படும். நடப்பாண்டு ஊட்டி கோடை விழா, 15ம் தேதி துவங்கியது.

முதல்வர் ஸ்டாலின் சென்று விழாவை துவக்கி வைத்தார். வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

இதைதொடர்ந்து, ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்காவில் கோடை விழா, 23ம் தேதி துவங்கியது. அமைச்சர்கள் பன்னீர்செல்வம், ராஜகண்ணப்பன், ராஜேந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில், 24ம் தேதி கோடை விழா துவங்கியது.

இதை முறைப்படி அமைச்சர் பன்னீர்செல்வம், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் துவக்கி வைத்திருக்க வேண்டும். ஆனால், மூன்று பேரும் விழாவிற்கு செல்லவில்லை.

திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம், கலெக்டர் சரவணன் ஆகியோர் விழாவை துவக்கி வைத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்ட தோட்டக்கலை துறையினர் கூறியதாவது:


திண்டுக்கல் மாவட்ட அமைச்சர்களுக்குள் யார் பெரியவர் என்ற மோதல் ஏற்பட்டுள்ளது. ஒருவரை முன்னிலைப்படுத்தி விழா நடத்துவதை, மற்றொருவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், விழாவிற்கு செல்லாமல், மாவட்ட அமைச்சர்கள் புறக்கணித்து உள்ளனர்.

யாருடன் சென்று விழாவை துவங்குவது என்பதை முடிவு செய்ய முடியாமல், துறை அமைச்சர் பன்னீர்செல்வமும், அங்கு செல்லவில்லை. வானிலையை காரணம் காட்டி, மூவரும் விழாவிற்கு செல்வதை தவிர்த்து உள்ளனர்.

அதேநேரத்தில், ஏற்காட்டில் விழா துவங்கிய நாளில், சேலத்தில் மழை பெய்தது. ஆனால், அமைச்சர்கள் பங்கேற்றனர்.

அதனால், வானிலையை காரணம் காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அமைச்சர்கள் கோஷ்டி மோதலால் கொடைக்கானல் கோடை விழா துவக்க நிகழ்ச்சி களையிழந்து விட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us