லோக்சபா இருக்கையில் முன்வரிசை யாருக்கு? கனிமொழிக்கா.. பாலுவுக்கா..
லோக்சபா இருக்கையில் முன்வரிசை யாருக்கு? கனிமொழிக்கா.. பாலுவுக்கா..
லோக்சபா இருக்கையில் முன்வரிசை யாருக்கு? கனிமொழிக்கா.. பாலுவுக்கா..
ADDED : ஜூன் 19, 2024 06:13 AM

பல ஆண்டுகளாக தி.மு.க., சார்பாக, பார்லிமென்டில் கோலோச்சி வந்த பாலுவுக்கு முக்கியத்தும் குறைக்கப்பட்டுள்ளதால், வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில், அவர் பின்வரிசைக்கு தள்ளப்பட்டு, முக்கியத்துவம் வாய்ந்த லோக்சபாவின் முன்வரிசை இருக்கையில் கனிமொழி அமரப் போகிறாரா என்ற புதிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
பார்லிமென்ட் அலுவல்கள் குறித்த எந்த பிரச்னை என்றாலும், 'புளோர் லீடர்' என்ற வகையில், அந்தந்த கட்சிகளின் தலைவர்களை சபாநாயகர், ராஜ்யசபா தலைவர் ஆகியோர் அழைத்து ஆலோசனை நடத்துவர்.
காலப்போக்கில் இந்த முறை மாறி, பார்லிமென்ட் கட்சித் தலைவர் மட்டுமே அழைக்கப்படுகிறார். அரசு சார்பில், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களுக்கும் பார்லிமென்ட் கட்சித் தலைவரே அழைக்கப்பட்டு வருகிறார்.
இதுவரையில், பல ஆண்டுகளாக மூத்த தலைவரான பாலுதான், பார்லிமென்டில் தி.மு.க.,வின் முகமாக அறியப்பட்டு வந்தார். எந்த கூட்டமாக இருந்தாலும், எந்த ஆலோசனையாக இருந்தாலும், எந்த சந்திப்பாக இருந்தாலும், அவர்தான் பிரதானமாக இருந்து வழி நடத்துவார்.
லோக்சபாவிலும், அவர்தான் சபையின் முன் இருக்கையில் அமர்ந்து, தேவைப்படும்போது எழுந்து கேள்விகளை எழுப்புவார். தி.மு.க.,வுக்கு என்று, பார்லிமென்டிற்குள் ஒரு கட்சி அலுவலகம் உள்ளது. அங்கு எப்போதாவது ஒருமுறை எம்.பி.,க்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுவது உண்டு.
அந்த நேரங்களில் எம்.பி.,க்களுக்கு அறிவுரை, கண்டிப்பு, உட்கட்சி பிரச்னை, பட்ஜெட் உரை மீதான விவாதத்தில் யார் பேசுவது, ஜனாதிபதி உரை மீது யார் பேசுவது, மானியக் கோரிக்கை விவாதங்களில் யார் பேசுவது என போட்டா போட்டியே நடக்கும்.
சில புதுமுக எம்.பி.,க் கள் பேசுவதற்கு வாய்ப்பு கேட்பர். அவர்களுக்கு பேச வாய்ப்பு தருவதா, வேண்டாமா என பல பஞ்சாயத்துக்களுக்கும், பாலுதான் தீர்வு கண்டு வந்தார்.
இப்போது சூழ்நிலையே மாறியுள்ளது. கட்சித் தலைமை வெளியிட்ட அறிவிப்பின்படி, தி.மு.க.,வின் பார்லிமென்ட் கட்சி தலைவராக பாலுவுக்கு பதிலாக கனிமொழி அமர்த்தப்பட்டுள்ளார்.
இந்த புதிய மாற்றத்தின்படி, இனிமேல் கனிமொழிதான் அரசு நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களுக்கு அழைக்கப்படுவார். சீனியாரிட்டி அடிப்படையில் தான் இருக்கைகள் ஒதுக்கப்படும்.
ஆனால், தி.மு.க.,வின் பார்லிமென்ட் குழு தலைவர் என்ற வகையில் கனிமொழிக்கு இருக்கையில் முன்னுரிமை அளிக்கப்படுமா அல்லது சீனியாரிட்டி அடிப்படையில் பாலுவுக்கு முன்னுரிமை அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இந்த விஷயத்தில் லோக்சபா செயலகம் எப்படி இருக்கை ஒதுக்கீட்டில்நடந்து கொள்ளப் போகிறது என்பதை அறிய தி.மு.க., வட்டாரங்களில் அதீத ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.
கட்சி தரும் பட்டியலில், முதல் பெயர் யாருடையதாக இருக்கிறதோ, அவருக்குத்தான் முதல் வரிசையில் இருக்கை வழங்கப்படும். யார் யார் என்ன பேச வேண்டுமென்பது உள்ளிட்ட எல்லாவற்றையும் அவரே முடிவு செய்வார்.
இந்நிலையில்தான், இருக்கையை கைப்பற்றப் போவது பார்லிமென்ட் கட்சித் தலைவரா, கட்சியின் சபைத் தலைவரா என்ற குழப்பம் முதன்முறையாக ஏற்பட்டுள்ளது.
இதில், சீனியாரிட்டி என்ற விவகாரமும் அடங்கியுள்ளதால், முன்வரிசை இருக்கையை, கனிமொழிக்கு பாலு தாரை வார்ப்பாரா அல்லது தன்வசம் வைத்துக் கொள்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அந்த இருக்கையில் அமர்கிறவர் கண் அசைத்தாலோ, கை விரலை காட்டினோலோ, அதற்கு ஏற்ப கோஷங்களை போட வேண்டும்; அமளியில் இறங்கியாக வேண்டும். அமைதிப்படுத்தினால் அமைதியாக அவரவர் இருக்கையில் அமர்ந்துவிட வேண்டும்.
மற்றபடி, அரசு அழைக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டங்களுக்கும், முறைப்படி கனிமொழிக்குத்தான் இனிமேல் அனைத்து தகவல் தொடர்புகளும் செல்லும். அவர்தான் கூட்டங்களுக்கு செல்வார். விரும்பினால், அவருடன் பாலுவும், சிவாவும் சேர்ந்து செல்லலாம்.
இதுதவிர, பார்லிமென்டில் கமிட்டிகள் நிறைய அமைக்கப்படும். நிலைக் குழு, தேர்வுக் குழு, ஆலோசனைக் குழு, நுாலகக் குழு என ஒவ்வொரு விஷயங்களுக்கும் குழுக்கள் அமைக்கப்படும்.
அந்தக் குழுக்களில் தி.மு.க., தரப்பில் யாரைத் தலைவராக போடுவது என்பதை கட்சியின் பார்லிமென்ட் லீடர்தான் முடிவு செய்து, பெயர்களை பரிந்துரை செய்தாக வேண்டும்.
இதுவரையில், அவற்றை பாலு செய்து வந்தார். தற்போது, தி.மு.க.,வுக்கு கிடைக்கப்போகும் குழுக்களின் தலைவர் பதவிகளுக்கான எம்.பி.,க்களின் பெயர்களை யார் இறுதி செய்வார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதில் முக்கியமானது நிலைக் குழு தலைவர் பதவி. இந்த பதவி, தி.மு.க.,வுக்கு நிச்சயம் ஒன்று கிடைக்கும். முயற்சி செய்தால் இரண்டு பதவிகள் கிடைக்கும். இந்த பதவிக்கு என நிறைய சலுகைகள் உண்டு.
பார்லிமென்டில் தனி அலுவலகம், உதவியாளர் என பல விஷயங்கள் உள்ள நிலையில் தி.மு.க.,வுக்கு கிடைக்கப்போகும் அந்த புதிய நிலைக் குழு தலைவர் பதவியில் அமரப்போவது யார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்த விஷயங்கள் அனைத்திலும் கனிமொழிக்கே முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது. அவ்வாறு, எல்லாவற்றையும் அவரே தலைமை ஏற்று நடக்கப் போகிறாரா அல்லது அவரும், பாலுவும் இணைந்து முடிவெடுக்கப் போகின்றனரா என்ற குழப்பத்தால், பார்லிமென்ட் தி.மு.க., வட்டாரங்களில் புதிய பரபரப்பு காணப்படுகிறது.
- நமது டில்லி நிருபர் -