'எந்த பெயரானாலும் சாராயத்தை ஒழிக்க வேண்டும்!'
'எந்த பெயரானாலும் சாராயத்தை ஒழிக்க வேண்டும்!'
'எந்த பெயரானாலும் சாராயத்தை ஒழிக்க வேண்டும்!'

பழனிசாமி:
தி.மு.க., ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறாய் ஓடுவதை தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்துள்ளேன். கள்ளச்சாராயத்தால் ஏற்கனவே பல உயிரிழப்புகள் ஏற்பட்ட பின்னும், அதை ஒழிக்க தி.மு.க., அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
அண்ணாமலை:
கள்ளச்சாராய வியாபாரிகளுடன், தி.மு.க., அமைச்சர் மஸ்தான் நெருங்கிய தொடர்பில் இருந்த விபரம், கடந்த ஆண்டே தெரிய வந்தும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தினகரன்:
கடந்த ஆண்டு விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த, 20க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் அருந்தி இறந்தனர். அதன் பின்னும் அதை ஒழிக்க, அரசு நடவடிக்கை எடுக்காததால், உயிரிழப்பு சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன.
வாசன்:
இனிமேல் கள்ளச்சாராயம் தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது என்பதற்காக, மாநிலம் முழுதும் காவல் துறையினரின் தொடர் கண்காணிப்பு அவசியம். தமிழகத்தில் கள்ளச்சாராயம் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த, சட்டம் - ஒழுங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பாலகிருஷ்ணன்:
போலீஸ் துறையின் மெத்தனம் மற்றும் கள்ளச்சாராய வியாபாரிகளுடன் கூட்டு இல்லாமல், இது நடந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, கள்ளச்சாராய வியாபாரிகள் மற்றும் கடமை தவறிய போலீஸ் துறையினர் உட்பட, தவறிழைத்தவர்கள் அனைவரின் மீதும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரேமலதா:
போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவது என் லட்சியம் என்று சொல்லும் முதல்வர் ஸ்டாலின், கள்ளச்சாராயத்தை தடுக்க கவனம் செலுத்துவதாக தெரியவில்லை. ஏற்கனவே கஞ்சா, குட்கா விற்பனையால், தமிழகம் மிக மோசமான நிலையில் உள்ளது. தெருவிற்கு தெரு டாஸ்மாக் மதுக் கடைகள் இருக்கும்போது கள்ளச்சாராயமும் அதிகரித்துள்ளது. மது, கஞ்சா, கள்ளச்சாராயம் இல்லாத நிலையை தமிழகத்தில் உருவாக்க, அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீமான்:
கஞ்சா, குட்கா, அரசு மது விற்பனையை தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையும் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதனால், பல உயிர்கள் பலியாகியுள்ளன. தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மை மற்றும் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதையே இது காட்டுகிறது. தி.மு.க., மூன்றாண்டு கால ஆட்சியின் சாதனையாக இது உள்ளது.
செல்வப்பெருந்தகை:
ஏற்கனவே கள்ளச்சாராயம் குடித்து, 22 பேர் உயிரிழந்து, ஒரு ஆண்டிற்குள் அதேபோன்று துயரமான சம்பவம் நடந்திருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது. கள்ளச்சாராயம் காய்ச்சுவதும், அதை விற்பதால் உயிர் பலி ஆவதும் தொடர்கதையாகியுள்ளது.
சாக்லேட் சுவையில் சரக்கு!
கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தவே, 'டாஸ்மாக்' மது விற்கப்படுவதாக அரசு கூறுகிறது. ஆனாலும், கள்ளச்சாராயம் விற்கப்படுவதை கட்டுப்படுத்த முடியாத செயலற்ற நிலையில் தான் காவல் துறையும், அரசும் முடங்கியுள்ளன. கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களுக்கும், கள்ளச்சாராயத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கலெக்டர் கூறியிருக்கிறார். தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் செயலற்ற தன்மையை மூடி மறைப்பதற்கான முயற்சியே இது.
திசை திருப்பும் மாவட்ட அதிகாரிகள்: அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., செந்தில்குமார் கூறியதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது என பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டது. உரிய நடவடிக்கையின்மையால் தற்போது கள்ளச் சாராயத்தால் பலர் இறந்துள்ளனர். இவர்கள் கள்ளச்சாராயம் குடித்ததால் தான் பாதிப்புக்கு உள்ளாகினர்.