Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ ஆம்ஸ்ட்ராங் கொலை வீடியோ பதிவு; போலீசார் வெளியிட்டதால் சர்ச்சை

ஆம்ஸ்ட்ராங் கொலை வீடியோ பதிவு; போலீசார் வெளியிட்டதால் சர்ச்சை

ஆம்ஸ்ட்ராங் கொலை வீடியோ பதிவு; போலீசார் வெளியிட்டதால் சர்ச்சை

ஆம்ஸ்ட்ராங் கொலை வீடியோ பதிவு; போலீசார் வெளியிட்டதால் சர்ச்சை

ADDED : ஜூலை 15, 2024 12:31 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி வெட்டிக் கொல்லப்பட்டார். கொலையின் போது பதிவான, 'சிசிடிவி' காட்சிகள் போலீசாரால் வெளியிடப்பட்டு உள்ளன. அதில், யார் யாரெல்லாம் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டுகின்றனர் என பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வழக்கறிஞர் ஒருவர் கூறியதாவது:

ஆம்ஸ்ட்ராங் கொலையின் போது பதிவான சிசிடிவி காட்சிகளையே, தற்போது வெட்டி, ஒட்டி போலீசார் வீடியோவாக வெளியிட்டு உள்ளனர். சட்ட ரீதியில் இது முற்றிலும் தவறானது.

ஏற்கனவே, ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கின் பின்னணியில் ஆம்ஸ்ட்ராங் உள்ளார்; அதற்கு பழிவாங்கவே, ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு திட்டமிட்டு, ரவுடிகளை வைத்து ஆம்ஸ்ட்ராங்கை கொன்றதாக தகவல் உள்ளது.

இந்நிலையில், ரவுடி திருவேங்கடத்தின் என்கவுன்டரை நியாயப்படுத்தும் நோக்கத்துக்காக, ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்படும் காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ பதிவு கொலைக்கான ஆவணங்களில் ஒன்று. அதை கோர்ட்டில் தான் சமர்ப்பிக்க வேண்டுமே தவிர, பொது வெளியில் வெளியிடக்கூடாது.

இப்படி வெளியிட்டதன் வாயிலாக, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் நிகழ்வாக கொலை சம்பவங்கள் அரங்கேறலாம். அதற்கு போலீசாரே வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.

இலங்கை தலைநகர் கொழும்பில் கிளப்புகள் வைத்து நடத்துபவர் கிளப் வசந்தன்; பணக்காரர். சில நாட்களுக்கு முன், கொழும்பில் புதிதாக ஒரு கிளப் துவங்கினார். துவக்க விழா பிரமாண்டமாக நடந்தது. அடுக்குமாடி கட்டடத்தின் முதல் மாடியில், கிளப் துவக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு வசந்தன் சென்றிருந்தார்.

அந்நிகழ்ச்சிக்கு காரில் வந்த இருவர், ஏ.கே., 56 ரக துப்பாக்கியால் வசந்தனை சுட்டனர். தடுக்க வந்தவரும் சுடப்பட்டார். இதில், இருவரும் இறந்தனர். சுட்டவர்கள் தப்பி ஓடி விட்டனர். விசாரணை தீவிரமாக நடந்து வரும் நிலையில், சுடப்பட்ட காட்சிகள் அடங்கிய சிசிடிவி பதிவுகளை போலீசார் வெளியிட்டனர்.

இது, இலங்கையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது; எதிர்க்கட்சியினர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இலங்கை பார்லிமென்டிலும் இது குறித்துப் பேசினர்.

கோர்ட்டில் ஆவணமாக சமர்ப்பிக்கப்பட வேண்டிய சிசிடிவி பதிவுகளை, எப்படி பொது வெளியில் வெளியிடலாம்; இதனால், மேலும் கொலை சம்பவங்கள் நடக்க வழி வகுக்குமே என்றும் எம்.பி.,க்கள் பேசினர்.

இதையடுத்து, வழக்கை விசாரித்து வந்த போலீஸ் அதிகாரியை இலங்கை அரசு, 'சஸ்பெண்ட்' செய்தது. அதே மாதிரியான நிகழ்வு தான், ஆம்ஸ்ட்ராங் கொலை விஷயத்திலும் நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us