'வளரிளம் குழந்தைகளின் வாழ்வும் மேம்பட வேண்டும்'
'வளரிளம் குழந்தைகளின் வாழ்வும் மேம்பட வேண்டும்'
'வளரிளம் குழந்தைகளின் வாழ்வும் மேம்பட வேண்டும்'
UPDATED : ஜூன் 12, 2024 04:45 AM
ADDED : ஜூன் 12, 2024 12:31 AM

குடும்பத்தின் வறுமையை விரட்ட கல்வியை தியாகம் செய்த பிள்ளைகள் ஏராளம். குழந்தை தொழிலாளர்களால் உடல் உழைப்பு தொழிலில் ஈடுபட்ட அந்த தலைமுறையில் வளர்ந்த மற்றும் வாழ்ந்த குழந்தைகளில், 95 சதவீதம் பேர், வளர்ந்த பிறகும், வறுமைக் கோடுக்கு கீழ் தான் இருந்தனர் என்பது தான் காலக்கொடுமை.
உடல் ரீதியான, உளவியல் ரீதியான, உணர்வு ரீதியான பாதிப்பில், வாழ்க்கையை தொலைத்த குழந்தை தொழிலாளர்கள் ஏராளம். இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் தான், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. 1 முதல், 14 வயது வரையுள்ளவர்களை குழந்தைகள் என வரையறை செய்து, அவர்களை பாதுகாக்க சட்டங்கள் இயற்றப்பட்டன.
அதன் விளைவு, தற்போது குழந்தை தொழிலாளர்கள் இல்லை; அதனால், கல்வி சாலைகளில், பட்டாம்பூச்சிகளாய் பறந்து திரிந்து, கல்வி படிக்கின்றனர் குழந்தைகள் என்பது, குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க, மத்திய, மாநில அரசுகள் எடுத்த பெரும் முயற்சிக்கு கிடைத்த பலன் என்று சொல்வதில் மிகையில்லை.
குழந்தைகள் நலன் பேணும் நோக்கில் தான், ஆண்டுதோறும், ஜூன் 12ம் தேதியை குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாக, ஐ.நா., சபை அறிவித்திருக்கிறது. 'நமது கடமைகளை நிறைவேற்றுவோம்: குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம்' என்பது தான், இந்தாண்டுக்கான மையக்கருத்து.
சமூக கல்வி மற்றும் முன்னேற்ற மைய செயல் இயக்குனர் நம்பி கூறியதாவது:
தமிழகத்தில், 1 முதல், 14 வயது வரையுள்ள குழந்தை தொழிலாளர்கள் இல்லை. ஆனால் 15 முதல், 18 வயது வரையுள்ள வளரிளம் ஆண், பெண்களும் குழந்தைகளாகவே கருதப்படுகின்றனர். அந்த வயதை உடையவர்கள், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தொழில் நிறுவனங்களில் குறிப்பிட்ட சதவீதம் பணிபுரிகின்றனர். இந்த வயதுடையவர்களில், ஏராளமான இடம் பெயர்ந்தோர், விடுதிகளில் தங்கி பணிபுரிகின்றனர்.
அவர்கள் பணிபுரிந்தாலும், தொடர்ச்சியாக, அவர்களுக்கு 4 மணி நேரம் தான் வேலை வாங்க வேண்டும்; வார விடுமுறை அவசியம் வழங்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு விதிகள் உள்ளன. அவர்களின் நலன் சார்ந்த விஷயங்கள் கவனம் செலுத்துவது.
பள்ளி, கல்லுாரி படிக்கும் அத்தகைய வயதுள்ளவர்கள், பள்ளி தேர்வு தொடர் விடுமுறையின் போது, நிறுவனங்களுக்கு பணிக்கு செல்கின்றனர். சிலர் பணம் சம்பாதிப்பதில் ஆர்வமாகி, மீண்டும் பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்வதில்லை; அத்தகையவர்களை கண்காணிக்க வேண்டும்.
இந்தாண்டு, மாவட்ட வாரியாக, 12ம் வகுப்பு முடித்தவர்கள், கல்லுரிக்கு செல்கின்றனரா என்பதை உறுதிப்படுத்த, அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது; இது வரவேற்கதக்க விஷயம். இவ்வாறு, அவர் கூறினார்.
- இன்று, குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள்
- நமது நிருபர் -