Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/கனிமொழிக்கா.. டி.ஆர்.பாலுவுக்கா.. லோக்சபாவில் யாருக்கு முன்வரிசை 'சீட்?'

கனிமொழிக்கா.. டி.ஆர்.பாலுவுக்கா.. லோக்சபாவில் யாருக்கு முன்வரிசை 'சீட்?'

கனிமொழிக்கா.. டி.ஆர்.பாலுவுக்கா.. லோக்சபாவில் யாருக்கு முன்வரிசை 'சீட்?'

கனிமொழிக்கா.. டி.ஆர்.பாலுவுக்கா.. லோக்சபாவில் யாருக்கு முன்வரிசை 'சீட்?'

ADDED : ஜூன் 22, 2024 05:37 AM


Google News
Latest Tamil News
பார்லிமென்ட் அலுவல்கள் குறித்த எந்த பிரச்னை என்றாலும், 'புளோர் லீடர்' என்ற வகையில், அந்தந்த கட்சிகளின் தலைவர்களை சபாநாயகர், ராஜ்யசபா தலைவர் அழைத்து ஆலோசனை நடத்துவர். காலப்போக்கில் இந்த முறை மாறி, பார்லிமென்ட் கட்சித் தலைவர் மட்டுமே அழைக்கப்படுகிறார். அரசு சார்பில், பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களுக்கும் பார்லிமென்ட் கட்சித் தலைவரே அழைக்கப்பட்டு வருகிறார்.

ஆலோசனைக் கூட்டம்


இதுவரை, பல ஆண்டுகளாக மூத்த தலைவரான டி.ஆர்.பாலுதான், பார்லிமென்டில் தி.மு.க.,வின் முகமாக அறியப்பட்டு வந்தார். எந்த கூட்டமாக இருந்தாலும், எந்த ஆலோசனையாக இருந்தாலும், எந்த சந்திப்பாக இருந்தாலும், அவர்தான் பிரதானமாக இருந்து வழி நடத்துவார். லோக்சபாவிலும், அவர்தான் சபையின் முன் இருக்கையில் அமர்ந்து, தேவைப்படும்போது எழுந்து கேள்விகளை எழுப்புவார். தி.மு.க.,வுக்கு என்று, பார்லிமென்டிற்குள் ஒரு கட்சி அலுவலகம் உள்ளது. அங்கு எப்போதாவது ஒருமுறை எம்.பி.,க்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுவது உண்டு.

அந்த நேரங்களில் எம்.பி.,க்களுக்கு அறிவுரை, கண்டிப்பு, உட்கட்சி பிரச்னை, பட்ஜெட் உரை மீதான விவாதத்தில் யார் பேசுவது, ஜனாதிபதி உரை மீது யார் பேசுவது, மானியக் கோரிக்கை விவாதங்களில் யார் பேசுவது என போட்டியே நடக்கும். சில புதுமுக எம்.பி.,க்கள் பேசுவதற்கு வாய்ப்பு கேட்பர். அவர்களுக்கு பேச வாய்ப்பு தருவதா, வேண்டாமா என பல பஞ்சாயத்துக்களுக்கும், பாலு தான் தீர்வு கண்டு வந்தார்.

இப்போது சூழ்நிலையேமாறியுள்ளது. கட்சித் தலைமை வெளியிட்ட அறிவிப்பின்படி, தி.மு.க.,வின் பார்லிமென்ட் கட்சி தலைவராக பாலுவுக்கு பதிலாக கனிமொழி அமர்த்தப்பட்டுள்ளார். இனிமேல் கனிமொழிதான் அரசு நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களுக்கு அழைக்கப்படுவார். சீனியாரிட்டி அடிப்படையில் தான் இருக்கைகள் ஒதுக்கப்படும்.

ஆனால், தி.மு.க.,வின் பார்லிமென்ட் குழு தலைவர் என்ற வகையில், கனிமொழிக்கு இருக்கையில் முன்னுரிமை அளிக்கப்படுமா அல்லது சீனியாரிட்டி அடிப்படையில் பாலுவுக்கு முன்னுரிமை அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்த விஷயத்தில் லோக்சபா செயலகம் எப்படி செயல்படப் போகிறது என்பதை அறிய, தி.மு.க., வட்டாரங்களில் ஆர்வம் காணப்படுகிறது.

கட்சி தரும் பட்டியலில், முதல் பெயர் யாருடையதாக இருக்கிறதோ, அவருக்குத்தான் முதல் வரிசையில் இருக்கை வழங்கப்படும். யார் யார் என்ன பேச வேண்டுமென்பது உள்ளிட்ட எல்லாவற்றையும், அவரே முடிவு செய்வார்.

பரபரப்பு


இந்நிலையில்தான், இருக்கையை கைப்பற்றப் போவது பார்லிமென்ட் கட்சித் தலைவரா, கட்சியின் சபைத் தலைவரா என்ற குழப்பம் முதன்முறையாக ஏற்பட்டுள்ளது. இதில், சீனியாரிட்டி என்ற விவகாரமும் அடங்கியுள்ளதால், முன்வரிசை இருக்கையை, கனிமொழிக்கு பாலு தாரை வார்ப்பாரா அல்லது தன்வசம் வைத்துக் கொள்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அரசு அழைக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டங்களுக்கும், முறைப்படி கனிமொழிக்குத்தான் இனிமேல் அனைத்து தகவல் தொடர்புகளும் செல்லும். அவர்தான் கூட்டங்களுக்கு செல்வார். விரும்பினால், அவருடன் பாலுவும், சிவாவும் சேர்ந்து செல்லலாம். இது தவிர, பார்லிமென்டில் கமிட்டிகள் நிறைய அமைக்கப்படும். நிலைக் குழு, தேர்வுக் குழு, ஆலோசனைக் குழு, நுாலகக் குழு என பல குழுக்கள் அமைக்கப்படும்.

அந்தக் குழுக்களில் தி.மு.க., தரப்பில் யாரை நியமிப்பது என்பதை, கட்சியின் பார்லிமென்ட் தலைவர் தான் முடிவு செய்து, பெயர்களை பரிந்துரை செய்தாக வேண்டும். இதுவரை, அவற்றை பாலு செய்து வந்தார். இந்த விஷயங்கள் அனைத்திலும் கனிமொழிக்கே முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது. அவ்வாறு எல்லாவற்றையும் அவரே தலைமை ஏற்று நடக்கப் போகிறாரா அல்லது அவரும் பாலுவும் சேர்ந்து முடிவெடுக்கப் போகின்றனரா என்ற குழப்பத்தால், பார்லிமென்ட் தி.மு.க., வட்டாரங்களில் பரபரப்பு காணப்படுகிறது.

சிறப்பு முன்னுரிமை

'லோக்சபா முன்வரிசையில் உட்காருவதற்கு என்று மரபுகளும் விதிமுறைகளும் உள்ளன. முன்னாள் பிரதமர்கள், மூத்த தலைவர்கள் போன்ற முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே, சிறப்பு முன்னுரிமை வழங்கப்படும். மற்றபடி, லோக்சபா தலைவரா, பார்லிமென்ட் கட்சித் தலைவரா என்பது குறித்து, அந்த கட்சி அளிக்கும் பரிந்துரையை, லோக்சபா செயலகம் பரிசீலனை செய்யும். மற்றபடி, சபாநாயகர் அழைக்கும் ஆலோசனைக் கூட்டத்திற்கு லோக்சபா கட்சித் தலைவர்தான் அழைக்கப்படுவார். பார்லிமென்ட் கட்சித் தலைவர், சபைக்கு வெளியில் நடக்கும் மற்ற ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்பார்' என்கிறது பார்லிமென்ட் வட்டாரம்.



- நமது டில்லி நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us