கோவையில் உருவாகிறது மேற்குப்புறவழிச்சாலை
கோவையில் உருவாகிறது மேற்குப்புறவழிச்சாலை
கோவையில் உருவாகிறது மேற்குப்புறவழிச்சாலை
UPDATED : ஜூலை 22, 2024 05:02 AM
ADDED : ஜூலை 22, 2024 01:37 AM

கோவை;கோவை மேற்குப்புற வழிச்சாலை திட்டத்தில், இரண்டாவது 'பேக்கேஜ்'க்கு ரூ.300 கோடி தேவைப்படும் என, மாநில நெடுஞ்சாலைத்துறையால் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணி, 80 சதவீதம் முடிந்து விட்டதால், சாலை பணிக்கு நிதி கோரும் அறிக்கையை, தமிழக அரசுக்கு விரைந்து அனுப்ப வேண்டுமென்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
கோவையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, பாலக்காடு ரோட்டில் மதுக்கரை அருகே மைல்கல் பகுதியில் துவங்கி, நரசிம்மநாயக்கன்பாளையத்தில் முடியும் வகையில், 32.43 கி.மீ., துாரத்துக்கு, 15 வருவாய் கிராமங்கள் வழியாக, மேற்குப்புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. தலா, 5 கிராமங்கள் வாரியாக நிலம் கையகப்படுத்தி, மூன்று 'பேக்கேஜ்'களாக, மாநில நெடுஞ்சாலைத்துறையால், இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.
முதல் 'பேக்கேஜ்' 11.80 கி.மீ., துாரம்; நிலம் கையகப்படுத்தி, சாலை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சிறு பாலங்கள், பாலங்கள், குறுக்கு வடிகால் மற்றும் மண் வேலைகள் நடந்து வருகின்றன. இதுவரை, 25 சதவீத பணிகள் முடிந்திருக்கின்றன. 5 கி.மீ., துாரத்துக்கு சாலை ஏற்படுத்தப்பட்டு, 2 கி.மீ., துாரத்துக்கு தார் ரோடு போடும் அளவுக்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
இரண்டாவது 'பேக்கேஜ்' 12.10 கி.மீ., துாரம். பேரூர், மேற்கு சித்திரைச்சாவடியில் நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டது. கலிக்கநாயக்கன்பாளையம், வடவள்ளி ஆகிய கிராமங்களில், 80 சதவீதம் முடிந்திருக்கிறது; ஆக., மாதத்துக்குள் முடிக்கவும், சோமையம்பாளையத்தில் நிலம் கையகப்படுத்தும் பணியை செப்., மாதத்துக்குள் முடிக்கவும், இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மூன்றாவது 'பேக்கேஜ்' 8.52 கி.மீ., துாரம். இதற்கு தேவையான நிலம் கையகப்படுத்த மேலும் ஆறு மாதங்கள் தேவைப்படும். இரண்டாவது மற்றும் மூன்றாவது 'பேக்கேஜ்' நிலம் கையகப்படுத்த தேவையான நிதியை, தமிழக அரசு ஒதுக்கி விட்டது. அதேநேரம், இரண்டாவது 'பேக்கேஜ்' வழித்தடத்தில் சாலை அமைக்க, ரூ.300 கோடி நிதி தேவைப்படும் என, மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான அறிக்கையை, தமிழக அரசுக்கு மாநில நெடுஞ்சாலைத்துறை அனுப்பி, இந்நிதியாண்டிலேயே நிர்வாக அனுமதி, தொழில்நுட்ப அனுமதி, நிதி ஒதுக்கீடு பெற வேண்டும். இந்நடைமுறையை செய்வதற்கே ஆறு மாதங்களாகும் என நெடுஞ்சாலைத்துறையினர் கணக்கிட்டுள்ளனர்.
முதல் 'பேக்கேஜ்' பணி முடிவதற்குள், இரண்டாவது 'பேக்கேஜ்'க்குரிய பூர்வாங்க வேலையை செய்தால், மேற்குப்புறவழிச்சாலை பாதியில் நிற்காமல் தொடர்ந்து நடைபெறும். அதனால், அரசின் ஒப்புதலுக்கும், நிதி ஒதுக்கீட்டும் மதிப்பீடு அறிக்கையை, மாநில நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து அனுப்ப வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.