
நானே வருவேன், பொன்னியின் செல்வன்--ஐ எதிர்பார்க்கும் தியேட்டர்காரர்கள்
கடந்த சில வருடங்களில் மட்டுமல்லாது, இதுவரையிலான தமிழ் சினிமா வரலாற்றிலேயே தமிழகத்தில் அதிக வசூலையும் லாபத்தையும் கொடுத்த படமாக இந்த வருடம் வெளிவந்த "விக்ரம்" படத்தைத்தான் வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் குறிப்பிடுகிறார்கள். அதற்குப் பிறகு சுமார் 50க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்தன. அவற்றில் தனுஷ் நடித்த "திருச்சிற்றம்பலம்" படம்தான் குறிப்பிடும்படியான வெற்றிப் படமாக அமைந்ததாக வினியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வேறு சில படங்களை அதன் தயாரிப்பாளர்கள் வெற்றிப் படங்கள் என்று சொல்லிக் கொண்டாலும் அவை வசூலிக்கவில்லை என்றே தியேட்டர்காரர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த மாதக் கடைசியில் வெளிவர உள்ள "நானே வருவேன், பொன்னியின் செல்வன்" ஆகிய படங்கள் தியேட்டர்காரர்கள் எதிர்பார்க்கும் படங்களாக அமைந்துள்ளது. தனுஷ் நடித்த "திருச்சிற்றம்பலம்" வெற்றியடைந்த காரணத்தால் "நானே வருவேன்" படத்திற்கும் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள். "பொன்னியின் செல்வன்" படம் பிரம்மாண்டமான படம், மல்டி ஸ்டார் படம், நாவலைப் படித்த குடும்பத்தினர் வருகை என ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைக்கும் என நம்புகிறார்கள்.
இந்த இரண்டு படங்களுமே அடுத்தடுத்த நாளில் வந்தாலும் வேறு படங்களின் போட்டியில்லை, ஆயுத பூஜை விடுமுறை நாட்கள் என பெரிய வசூலைக் குவிக்கும் என காத்திருக்கிறார்கள். இரண்டு படங்களும் தியேட்டர்காரர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுமா ?.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!