Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/இடமாறுதலில் சென்ற பள்ளி ஆசிரியர் பைக் பரிசளித்த கிராம மக்கள்

இடமாறுதலில் சென்ற பள்ளி ஆசிரியர் பைக் பரிசளித்த கிராம மக்கள்

இடமாறுதலில் சென்ற பள்ளி ஆசிரியர் பைக் பரிசளித்த கிராம மக்கள்

இடமாறுதலில் சென்ற பள்ளி ஆசிரியர் பைக் பரிசளித்த கிராம மக்கள்

ADDED : ஜன 11, 2024 11:32 PM


Google News
Latest Tamil News
ஷிவமொகா: பணியிட மாறுதலில் செல்லும் ஆசிரியருக்கு 1.10 லட்சம் ரூபாய் மதிப்பிலான, பல்சர் பைக் பரிசளித்து, கிராம மக்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

துவக்க பள்ளி


ஷிவமொகா ஒசநகர் வல்லுரு கிராமத்தில், அரசு துவக்க பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 7ம் வகுப்பு வரை, மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. 2007ல் இப்பள்ளியில், சந்தோஷ் காஞ்சன் என்பவர் 20 வயதில், ஆசிரியராக பணியில் சேர்ந்தார். வல்லுரு கிராமத்தில், ஆதிவாசி மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர்.

அவர்கள், தங்கள் குழந்தைகளை, பள்ளிக்கு அனுப்பாமல் இருந்தனர். சந்தோஷ் காஞ்சன் வீடு, வீடாக சென்று கல்வி கற்பதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறினார்.

இதன்பின்னர் ஆதிவாசி மக்கள் தங்கள், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினர். இந்த பள்ளியின் ஆசிரியர்களாக சந்தோஷ் காஞ்சனும், நயனா என்பவரும் இருந்தனர். சந்தோஷ் பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியராகவும் இருந்தார்.

இந்நிலையில் சந்தோஷை உடுப்பி வராகி கிராமத்தில் உள்ள, பள்ளிக்கு இடமாற்றம் செய்து, சமீபத்தில் அரசு உத்தரவிட்டது. ஆசிரியை நயனா, தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

ஆனந்த கண்ணீர்


சந்தோஷ் இடமாற்றம் செய்யப்பட்டது பற்றி அறிந்ததும், கிராம மக்கள் கவலையில் ஆழ்ந்தனர். ஆனாலும் வீடு, வீடாகச் சென்று கிராம மக்களை அவர் சமாதானப்படுத்தினார். நேற்று முன்தினம் சந்தோஷ் வல்லுரு கிராமத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்த போது, அவருக்கு கிராம மக்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

அவருக்கு 1.10 லட்சம் ரூபாய் மதிப்பிலான, பல்சர் பைக்கை பரிசாக அளித்தனர். இதை சற்றும் எதிர்பாராத சந்தோஷ், கிராம மக்கள் அன்பை நினைத்து, ஆனந்த கண்ணீர் விட்டார். பின் மனைவி, மகனுடன் பல்சர் பைக்கில், உடுப்பிக்கு புறப்பட்டு சென்றார்.

இதுகுறித்து வல்லுரு கிராம மக்கள் கூறுகையில், '17 ஆண்டுகளுக்கு முன்பு, ஆசிரியர் சந்தோஷ் எங்கள் கிராமத்திற்கு வந்தபோது, பைக் என்றால் என்ன என்பதே எங்கள் கிராம மக்களுக்கு தெரியாது. எங்களுக்கு ஏதாவது அவசர தேவை என்றால், 8 கி.மீ., நடந்து சென்று, பஸ் ஏறினோம்.

'ஆசிரியர் சந்தோஷிடம் பைக் இருந்ததால், அவரது பைக்கை எங்கள் அவசர தேவைக்கு தந்து உதவினார். மாணவர்களை வீட்டிற்கு சென்றே, பைக்கில் பள்ளிக்கு அழைத்துச் செல்வர். எங்களுக்கு அவர் செய்த உதவிக்காக, அவருக்கு பல்சர் பைக் பரிசு அளித்து உள்ளோம்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us