Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/தெலுங்கானா எம்.எல்.ஏ-., சாலை விபத்தில் பலி

தெலுங்கானா எம்.எல்.ஏ-., சாலை விபத்தில் பலி

தெலுங்கானா எம்.எல்.ஏ-., சாலை விபத்தில் பலி

தெலுங்கானா எம்.எல்.ஏ-., சாலை விபத்தில் பலி

ADDED : பிப் 23, 2024 11:03 PM


Google News
Latest Tamil News
ஹைதராபாத்: தெலுங்கானாவில் நடந்த சாலை விபத்தில், பி.ஆர்.எஸ்., கட்சி எம்.எல்.ஏ., லாசியா நந்திதா, 36, பலியானார்.

தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு பி.ஆர்.எஸ்., எனப்படும் பாரத் ராஷ்ட்ர சமிதியைச் சேர்ந்த லாசியா நந்திதா எம்.எல்.ஏ.,வாக இருந்தார்.

இவர் நேற்று தன் உதவியாளருடன் சதாசிவ பேட்டாவை நோக்கி காரில் சென்றார்.

அதிகாலை 5:30 மணிக்கு பட்டான் செருவு என்ற இடத்தில், முன்னால் சென்ற லாரியை முந்த முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர இரும்பு தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், சம்பவ இடத்திலேயே லாசியா பலியானார். காரை ஓட்டிய உதவியாளர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

செகந்திராபாத் கண்டோன்மென்ட் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த இவரது தந்தை, கடந்தாண்டு உடல்நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து நடந்த இடைத்தேர்தலில் லாசியா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அவரது மறைவுக்கு, முதல்வர் ரேவந்த் ரெட்டி இரங்கல் தெரிவித்து உள்ளார். பி.ஆர்.எஸ்., தலைவர் சந்திரசேகர ராவ், மத்திய அமைச்சரும், மாநில பா.ஜ., தலைவருமான கிஷன் ரெட்டி உட்பட பல்வேறு தரப்பினர் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கடந்த 15ம் தேதி, நல்கோண்டாவில் இருந்து ஹைதராபாத் திரும்பும் போது ஏற்பட்ட சாலை விபத்தில் லாசியா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், மற்றொரு சாலை விபத்தில் அவர் பலியானது தெலுங்கானா மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விபத்து குறித்து விசாரணை நடத்திய போலீசார், காரை அதிவேகமாக ஓட்டியதே விபத்துக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us