சிவசங்கரப்பா மீது நடவடிக்கை எடுக்க சிவகுமார் தயக்கம்
சிவசங்கரப்பா மீது நடவடிக்கை எடுக்க சிவகுமார் தயக்கம்
சிவசங்கரப்பா மீது நடவடிக்கை எடுக்க சிவகுமார் தயக்கம்
ADDED : ஜன 29, 2024 07:14 AM

தாவணகெரே: பா.ஜ., -- எம்.பி., வெற்றி பெற வேண்டுமென வாழ்த்திய, காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ., சாமனுார் சிவசங்கரப்பா மீது காங்கிரஸ் தலைவர் என்ன நடவடிக்கை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு, கட்சிக்குள் நிலவுகிறது.
தாவணகெரே தெற்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சாமனுார் சிவசங்கரப்பா, 92. சில நாட்களுக்கு முன்பு, ஷிவமொகாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், 'ஷிவமொகா பா.ஜ., - எம்.பி., ராகவேந்திராவை பாராட்டினார். தொகுதியில் நிறைய வளர்ச்சிப் பணிகள் செய்து இருப்பதாகவும், அவரை மீண்டும் மக்கள் வெற்றி பெற வைக்க வேண்டும்' என்று வாழ்த்தினார்.
முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகனான ராகவேந்திராவை தோற்கடிக்க, காங்கிரஸ் கட்சியினர் நினைத்து உள்ளனர். ஆனால் சிவசங்கரப்பா, அவரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கூறியது, அந்த கட்டிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவசங்கரப்பா கருத்துக்கு, பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத்தும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். கட்சிக்கு துரோகம் செய்யும் சிவசங்கரப்பாவை 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பல காங்கிரஸ் தலைவர்கள், மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமாரிடம், 'சிவசங்கரப்பா மீது நடவடிக்கை எடுங்கள்' என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அவர் தயங்குவதாக தெரிகிறது.
இதற்கு முக்கிய காரணம் லிங்காயத் சமூக ஓட்டுகள். சிவசங்கரப்பா அகில இந்திய லிங்காயத் சமூக தலைவராக உள்ளார். அவர் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்தால், வரும் லோக்சபா தேர்தலில் லிங்காயத் சமூக ஓட்டுகளை இழக்க நேரிடுமோ என்ற கவலை எழுந்துள்ளதாக தெரிகிறது. இதனாலேயே சிவசங்கரப்பா விஷயத்தில் கட்சி மேலிடமே முடிவு எடுக்கும் என்று கூறி, சிவகுமார் நழுவி உள்ளார்.
இந்த பிரச்னையில் சாமனுார் சிவசங்கரப்பா மீது கட்சி மேலிடம் என்ன நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு, கட்சிக்குள்ளும் எதிர்க்கட்சி வட்டாரங்களிலும் நிலவுகிறது.
ஒருவேளை அவர் மீது கட்சி நடவடிக்கை எடுத்தால், அதை தேர்தல் வேளையில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பயன்படுத்துவது குறித்து, பா.ஜ., ஆலோசிக்கிறது.