ராகுலின் யாத்திரைக்கு கட்டுப்பாடுகள்
ராகுலின் யாத்திரைக்கு கட்டுப்பாடுகள்
ராகுலின் யாத்திரைக்கு கட்டுப்பாடுகள்
ADDED : ஜன 11, 2024 01:09 AM
புதுடில்லி: பல்வேறு நிபந்தனைகளுடன், 'பாரத் ஜோடோ நீதி யாத்திரை'யை துவங்க, காங்கிரசுக்கு மணிப்பூர் அரசு அனுமதி வழங்கி உள்ளது.
கடந்த 2022 செப்., 7ம் தேதி, தமிழகத்தின் கன்னியாகுமரியில், பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் காங்., - எம்.பி., ராகுல் நடைபயணம் மேற்கொண்டார். இது, 2023 ஜன., 30ல் காஷ்மீரில் நிறைவடைந்தது.
இதைத் தொடர்ந்து, வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் இருந்து, மஹாராஷ்டிராவின் மும்பை வரை, பாரத் ஜோடோ நீதி யாத்திரை என்ற நடைபயணத்தை, வரும் 14ம் தேதி ராகுல் துவங்க திட்டமிட்டு உள்ளார்.
மொத்தம் 6,713 கி.மீ., துாரம் கொண்ட இந்த யாத்திரை, 100 லோக்சபா தொகுதிகள் மற்றும் 337 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த யாத்திரையை, மணிப்பூரின் இம்பால் மாவட்டத்தில் உள்ள ஹப்டா கங்ஜெய்புங் மைதானத்தில் துவங்க, அம்மாநில பா.ஜ., அரசிடம், ஒரு வாரத்துக்கு முன், காங்., நிர்வாகிகள் அனுமதி கோரினர்.
இதற்கு, அரசு அனுமதி மறுத்ததாக முதலில் தகவல் வெளியானது.
இந்நிலையில், பல்வேறு நிபந்தனைகளுடன், ஹப்டா கங்ஜெய்புங் மைதானத்தில், பாரத் ஜோடோ நீதி யாத்திரையை துவங்க, காங்கிரசுக்கு மணிப்பூர் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்து, இம்பால் கிழக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், 'சட்டம் - ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், குறைந்த எண்ணிக்கையிலான நிர்வாகிகளுடன், யாத்திரையை காங்., நடத்தலாம்.
'இதில் பங்கேற்போரின் விபரங்கள் குறித்த பட்டியலை, முன்கூட்டியே கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
'ஏற்கனவே, மாவட்டத்தில், 144 தடை உத்தரவு அமலில் உள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுஉள்ளது.