குடியரசு தின மலர் கண்காட்சி லால்பாக் பூங்காவில் ஏற்பாடு
குடியரசு தின மலர் கண்காட்சி லால்பாக் பூங்காவில் ஏற்பாடு
குடியரசு தின மலர் கண்காட்சி லால்பாக் பூங்காவில் ஏற்பாடு
ADDED : ஜன 10, 2024 10:52 PM
பெங்களூரு: குடியரசு தினத்தை முன்னிட்டு, மலர் கண்காட்சிக்கு லால்பாக் பூங்கா தயாராகி வருகிறது. இம்முறை மலர் கண்காட்சி பசவண்ணர் சம்பந்தப்பட்டதாக இருக்கும்.
குடியரசு தினத்தை முன்னிட்டு, பெங்களூரின் லால்பாக் பூங்காவில், தோட்டக்கலைத் துறை சார்பில் மலர் கண்காட்சி ஏற்பாடு செய்யப்படுகிறது. ஜனவரி 18 முதல், 28 வரை மலர் கண்காட்சி நடக்கும். இம்முறை மலர் கண்காட்சி, பசவண்ணர் தொடர்புடையதாக இருக்கும்.
இது குறித்து, தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர் ஜெகதீஷ் கூறியதாவது:
பசவண்ணர் 12ம் நுாற்றாண்டில், சமுதாயத்தில் புரட்சியை ஏற்படுத்தினார். அவரது தத்துவங்களை பூக்கள் வடிவில் கொண்டு வர, தோட்டக்கலைத் துறை திட்டமிட்டுள்ளது.
தீண்டாமை, ஆண், பெண் பாரபட்சம், ஜாதிய வேற்றுமை, மூட நம்பிக்கைகளை எதிர்த்தவர். இவரது சிந்தனைகள், தத்துவங்கள் இன்றைய சமுதாயத்துக்கு முன் மாதிரி.
எனவே இம்முறை மலர் கண்காட்சியில் பசவண்ணர் மற்றும் அவரது தத்துவங்கள் பூக்களால் வடிவமைக்கப்படுகின்றன.
மலர் கண்காட்சிக்கு, 2.75 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. நுழைவு கட்டணம் குறித்து, இன்னும் முடிவு செய்யவில்லை. மலர் கண்காட்சியின் போது, துாய்மையை காப்பாற்றுவது குறித்து, உயர் அதிகாரிகள், சுற்றுச்சூழல் வல்லுனர்கள், பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள், போக்குவரத்து போலீசாருடன் ஆலோசனை நடத்தப்படும்.
மலர் கண்காட்சிக்கு வரும் பொதுமக்கள், சுற்றுலா பயணியர், மெட்ரோ ரயில்களை பயன்படுத்த வேண்டும். ஸ்மார்ட் பார்க்கிங் வசதியை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.