கடலில் மூழ்கிய 4 மாணவர்களில் மூவரின் உடல் கரை ஒதுங்கியது
கடலில் மூழ்கிய 4 மாணவர்களில் மூவரின் உடல் கரை ஒதுங்கியது
கடலில் மூழ்கிய 4 மாணவர்களில் மூவரின் உடல் கரை ஒதுங்கியது
ADDED : ஜன 02, 2024 11:21 PM
புதுச்சேரி:கடலில் குளித்தபோது மாயமான நான்கு மாணவர்களில், இரு மாணவியர் உட்பட மூவர் உடல் கரை ஒதுங்கியது.
புதுச்சேரி நெல்லித்தோப்பு, டி.ஆர். நகர், இரண்டாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள்கள் மோகனா, 17; லேகா, 14; இருவரும், சுப்ரமணிய பாரதி அரசு பள்ளியில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு படித்தனர். இருவரும், தாய் மீனாட்சியுடன் புதுச்சேரி கடற்கரைக்கு புத்தாண்டு கொண்டாடச் சென்றனர்.
அவர்களுடன், குடும்ப நண்பர்களான எல்லப்பிள்ளைச்சாவடி, சாராதாம்பாள் கோவில் அருகில் வசிக்கும் முருகையன் மகன் நவீன், 17; பிளஸ் 2 மாணவர், அவரது நண்பர் சாரம், பாலாஜி நகர் மகி மகன் கிஷோர்,17; டிப்ளமோ கேட்ரிங் மாணவர் ஆகியோரும் சென்றனர்.
மதியம் 12:45 மணிக்கு, சீகல்ஸ் ஓட்டல் பின்புறம் கடலில் குளித்தனர். ராட்சத அலையில் சிக்கி நான்கு பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். மீனவர்கள் கடலுக்குள் இறங்கி தேடியும் யாரும் கிடைக்கவில்லை. ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து, மாயமானவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் கடலில் ரோந்து சென்ற கடலோர பாதுகாப்பு படையினர் வீராம்பட்டினம் கரையில் இருந்து 7 நாட்டிகல் மைல் துாரத்தில் மாணவி லேகா உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
மாணவர் கிஷோர் உடல் சின்ன வீராம்பட்டினம் கடற்கரையிலும், மாணவி மோகனா உடல் வீராம்பட்டினம் கடற்கரையில் நேற்று முன் தினம் மாலை கரை ஒதுங்கியது. மீட்கப்பட்ட மூவரின் உடல்களும் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.