அரசு பங்களா வழங்குவதில் அலட்சியம்: எதிர்க்கட்சி தலைவர் அசோக் அதிருப்தி
அரசு பங்களா வழங்குவதில் அலட்சியம்: எதிர்க்கட்சி தலைவர் அசோக் அதிருப்தி
அரசு பங்களா வழங்குவதில் அலட்சியம்: எதிர்க்கட்சி தலைவர் அசோக் அதிருப்தி
ADDED : ஜூன் 13, 2024 04:59 PM

பெங்களூரு:கர்நாடக காங்கிரஸ் அரசு, எதிர்க்கட்சி தலைவர் அசோக்குக்கு, இன்னும் அரசு பங்களா வழங்கவில்லை. ஏற்கனவே இவர் நான்கு கடிதங்கள் எழுதியும், அதிகாரிகளிடம் இருந்து பதில் வரவில்லை.
கடந்த 2023 மே மாதம், கர்நாடக சட்டசபை தேர்தல் நடந்தது. காங்கிரஸ் 135 தொகுதிகளை கைப்பற்றி, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. பா.ஜ., 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று, எதிர்க்கட்சியாக அமர்ந்தது.
எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு, அசோக், பசனகவுடா பாட்டீல் எத்னால், அரவிந்த் லிம்பாவளி, அஸ்வத் நாராயணா உட்பட, பலர் முட்டி மோதினர். எனவே எதிர்க்கட்சி தலைவரை நியமிக்காமல், பா.ஜ., மேலிடம் தாமதம் செய்தது. எதிர்க்கட்சி தலைவர் இல்லாமலேயே, ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நடந்தது. இதை பற்றி ஆளுங்கட்சி காங்கிரஸ் தலைவர்கள் கிண்டலாக விமர்சித்தனர்.
அலசி, ஆராய்ந்து 2023 நவம்பரில் அசோக், கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவர் பொறுப்பேற்று, ஆறு மாதங்கள் கடந்தும் அவருக்கு அரசு பங்களா வழங்கவில்லை. தனக்கு பங்களா ஒதுக்கும்படி முதல்வருக்கு, தலைமை செயலருக்கு பல முறை, அசோக் கடிதம் எழுதியும் பயனில்லை.
இது தொடர்பாக, அசோக் கூறியதாவது:
எனக்கு அரசு பங்களா வழங்கும்படி, பல முறை நான் வேண்டுகோள் விடுத்தேன். ஆனால் இதுவரை வழங்கவில்லை. அமைச்சர்களுக்கு அரசு பங்களா வழங்குகிறது. எதிர்க்கட்சி தலைவருக்கு வழங்கவில்லை. அரசு தரப்பில் யாரும் பதில் அளிக்கவில்லை.
கடந்த 2023 நவம்பரில், அரசு தலைமை செயலருக்கும், நடப்பாண்டு பிப்ரவரியில் முதல்வருக்கும் கடிதம் எழுதினேன். குமார கிருபா, ரோஸ் வியூ காட்டேஜ் என, எந்த இடத்திலும் அரசு பங்களா கேட்டும் பயனில்லை. எனவே ஜெயநகரில் உள்ள என் சொந்த வீட்டில், அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்துகிறேன்.
மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் வரும் மக்களை சந்திக்க, அரசு இல்லம் இல்லை. விதான்சவுதா அருகில் உள்ள பங்களாவை கொடுத்தால், அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டங்களுக்கு வசதியாக இருக்கும். இந்த பங்களாக்கள் காலியாக இல்லையாம்.
அரசு பங்களா வழங்குவது போன்ற, முக்கியமான முடிவுகளை எடுக்க தாமதிக்க கூடாது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் முதல்வரும், தலைமை செயலரும் தாமதம் செய்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.