துப்பாக்கியை காட்டி மிரட்டல்: பந்தா ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் தாயார் கைது
துப்பாக்கியை காட்டி மிரட்டல்: பந்தா ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் தாயார் கைது
துப்பாக்கியை காட்டி மிரட்டல்: பந்தா ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் தாயார் கைது
UPDATED : ஜூலை 18, 2024 12:19 PM
ADDED : ஜூலை 18, 2024 11:37 AM

மும்பை: உள்ளூர் விவசாயிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டிய விவகாரத்தில் பந்தா ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா கேத்கரின் தாயார் மனோரமாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பூஜா கேத்கர் என்ற இளம்பெண் யு.பி.எஸ்.சி., தேர்வில் அகில இந்திய அளவில் 821வது இடத்தை பிடித்தார். பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணியில் சேர்ந்த அவர், புனே உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டார். அரசால் வழங்கப்படாத வசதிகளை இவர் அத்துமீறி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தன் சொகுசு காரில் அரசு பெயர் பலகை மற்றும் சிவப்பு - நீல சுழல் விளக்கு பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. விதிமீறலில் ஈடுபட்டதை அடுத்து பூஜா, வாஷிம் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
ஐ.ஏ.எஸ்., பணியில் சேர்ந்தபோது, உடல் ரீதியான குறைபாடு மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான சான்றிதழ்களை முறைகேடாக சமர்ப்பித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க மத்திய அரசு ஒரு நபர் கமிஷனை சமீபத்தில் அமைத்தது. அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழவே, பூஜா கேத்கரின் பயிற்சியை மத்திய அரசு நிறுத்தி வைத்தது.
இந்நிலையில், அடுத்த சர்ச்சையில் பூஜா சிக்கியுள்ளார். மஹாராஷ்டிராவில் உள்ள பல்கோன் கிராமத்தின் ஊர் தலைவராக பூஜாவின் தாய் மனோரமா உள்ளார். அவரும், அவரது கணவரும் நிலப்பிரச்னையில் உள்ளூர் விவசாயிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, மனோரமா தலைமறைவானார். அவர்களைப் பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக மஹாராஷ்டிரா போலீசார் தெரிவித்தனர்.
இன்று, மஹாத் என்ற இடத்தில் உள்ள ஹோட்டலில் மனோரமாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திலீப் கேத்கர் இன்னும் தலைமறைவாக உள்ளார்.
தில்லுமுல்லு தந்தை
பூஜா கேத்கரின் தந்தை திலீப் கேத்கரும் மஹாராஷ்டிரா அரசில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் பணியாற்றிய போது, ஊழல் புகாரில் 2018 மற்றும் 2020 ஆண்டுகளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர். 2018 ல் பிராந்திய அதிகாரியாக பணியாற்றியபோது, குடிநீர் மற்றும் மின்சார இணைப்பு வழங்க ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை லஞ்சம் கேட்டதாக திலீப் கேத்கர் மீது மர அறுவை உரிமையாளர்கள் போலீசில் புகார் தெரிவித்து இருந்தனர். 2015 ல், அவர் தேவையற்ற தொந்தரவு அளிப்பதாக சிறு வணிகர்கள் அரசிற்கு புகார் அனுப்பினர். பணியில் இருந்த போது, 6 முதல் 7 மாதங்கள் வரை எந்த அறிவிப்பும் இல்லாமல் விடுப்பு எடுத்த அவர், ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்பதாக நிறுவனம் ஒன்றும் கூறியது. அவர் மீது எழுந்த புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு முடிவில் 2020ம் ஆண்டு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.