பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம் முறியடிப்பு: ஹரியானாவில் தடுப்புகள் நீக்கம்
பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம் முறியடிப்பு: ஹரியானாவில் தடுப்புகள் நீக்கம்
பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம் முறியடிப்பு: ஹரியானாவில் தடுப்புகள் நீக்கம்
ADDED : மார் 21, 2025 02:36 AM

சண்டிகர்: விவசாய சங்கங்கள், மாநில எல்லையில் அமர்ந்து கடந்த ஓராண்டாக நடத்திய போராட்டத்தை, பஞ்சாப் அரசு முறியடித்தது. விவசாயிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து எல்லையில் அமைத்திருந்த தடுப்புகளை ஹரியானா அரசு நேற்று நீக்கியது.
பஞ்சாபில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி அமைந்துள்ளது. ஹரியானாவில், முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துஉள்ளது.
பஞ்சாபைச் சேர்ந்த சில விவசாய சங்கங்கள், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்தாண்டு பிப்., 13ல் டில்லி நோக்கி பேரணி செல்ல முயன்றனர்.
இவர்களை பஞ்சாப் அரசு தடுத்து நிறுத்தியது. இதைத் தொடர்ந்து, பஞ்சாபை ஒட்டியுள்ள ஹரியானா அரசும், டில்லி நோக்கி செல்ல விடாமல் தடுக்க எல்லையில் தடுப்புகளை அமைத்தது.
இதையடுத்து பஞ்சாப் எல்லையில் அமர்ந்தபடி, விவசாய சங்கங்கள் ஓராண்டாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தன.
இதனால், பஞ்சாபிலிருந்து ஹரியானா வழியாக டில்லிக்கான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சு நடத்த மத்திய அரசு குழு அமைத்துள்ளது.
இதன்படி, மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் சண்டிகரில் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த பேச்சில் பங்கேற்று திரும்பிய விவசாய சங்கங்களின் முக்கிய தலைவர்களான ஸ்வரண் சிங் பந்தேர் உள்ளிட்டோரை, மொஹாலி எல்லையில், பஞ்சாப் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதைத் தொடர்ந்து, எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து எல்லையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அகற்றும் பணியில், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில அரசுகள் நேற்று ஈடுபட்டன.
புல்டோசர் உள்ளிட்டவை பயன்படுத்தி இந்தத் தடுப்புகள் அகற்றும் பணி தீவிரமாக நடந்தது.