ADDED : மே 27, 2025 09:16 PM
விக்ரம்நகர்:தேசிய தலைநகரில் கொரோனா நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது, என, முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார்.
தேசிய தலைநகரில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை 104ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பரவல் தென்பட்ட உடன், தன் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்ஸிஜன், மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் பணியாளர்களை தயார் நிலையில் இருக்கும்படி கடந்த வாரம், மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. அத்துடன் கொரோனா குறித்த வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டது.
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தேசிய தலைநகரில் கொரோனா கட்டுப்பாட்டில் இருக்கிறது. தற்போதைய நிலையில் அவசரநிலையோ ஆபத்தான சூழ்நிலையோ உருவாகவில்லை.
பருவகாலத்தில் ஏற்படும் சளி, இருமல் ஏற்படுவது போல, கொரோனா ஒரு பருவகால வைரஸ் போன்றது. மக்கள் பயப்படவோ கவலைப்படவோ வேண்டாம்.
எங்கள் மருத்துவமனைகள் தயார்நிலையில் உள்ளன. நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.