Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/வால்மீகி ஆணையத்தின் தலைவர் பசனகவுடா தத்தல் விசாரணைக்கு ஆஜர்! அமலாக்க துறையின் கிடுக்கிப்பிடியால் திணறல்

வால்மீகி ஆணையத்தின் தலைவர் பசனகவுடா தத்தல் விசாரணைக்கு ஆஜர்! அமலாக்க துறையின் கிடுக்கிப்பிடியால் திணறல்

வால்மீகி ஆணையத்தின் தலைவர் பசனகவுடா தத்தல் விசாரணைக்கு ஆஜர்! அமலாக்க துறையின் கிடுக்கிப்பிடியால் திணறல்

வால்மீகி ஆணையத்தின் தலைவர் பசனகவுடா தத்தல் விசாரணைக்கு ஆஜர்! அமலாக்க துறையின் கிடுக்கிப்பிடியால் திணறல்

ADDED : ஜூலை 19, 2024 05:46 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு : வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, அந்த ஆணையத்தின் தலைவரான காங்கிரஸ் எம்.எல்.ஏ., பசனகவுடா தத்தல் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளைக் கேட்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் திணறடித்தனர்.

கர்நாடக பழங்குடியினர் நலத்துறைக்கு உட்பட்டது, வால்மீகி மேம்பாட்டு ஆணையம். இந்த ஆணையத்திற்கு அரசு ஒதுக்கிய 187 கோடி ரூபாயில் 94 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது.

இந்த முறைகேட்டில் வங்கி அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரிந்ததால், சி.பி.ஐ., விசாரித்தது. பணம் சட்டவிரோதமாக சில வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டு இருப்பதாக, அமலாக்கத்துறைக்கு, சி.பி.ஐ., தகவல் கொடுத்தது.

இதையடுத்து, பழங்குடியினர் நல அமைச்சராக இருந்த நாகேந்திரா, வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவரான காங்கிரஸ் எம்.எல்.ஏ., பசனகவுடா தத்தல் ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

காவல் நீட்டிப்பு


முறைகேடு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் நாகேந்திராவை கடந்த 12ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. அவரை ஆறு நாட்கள் காவலில் எடுத்து, அமலாக்கத்துறை விசாரித்தது.

நேற்றுடன் அவரது காவல் முடிந்த நிலையில் பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நாகேந்திராவிடம் மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் தங்கள் காவலில் அனுப்பும்படி, அமலாக்கத்துறை வக்கீல் கேட்டுக்கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி பிரீத், நாகேந்திராவின் காவலை மேலும் ஐந்து நாட்கள் நீட்டித்து உத்தரவிட்டார்.

தேர்தல் விதிகள்


இதற்கிடையில் விசாரணைக்கு ஆஜராகும்படி பசனகவுடா தத்தலுக்கும், அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். அவர் தலைமறைவாகி விட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், பெங்களூரு சாந்தி நகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நேற்று காலை 11:00 மணிக்கு தத்தல் வந்தார். வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு குறித்து அவரிடம் அதிகாரிகள் விசாரித்தனர்.

அப்போது, 'நான் ஆணைய தலைவர் ஆனதும், லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன. இதனால் நான் அலுவலகத்திற்கு செல்லவில்லை. முறைகேடு நடந்தது பற்றி எனக்கு தெரியாது' என்று தத்தல் கூறியுள்ளார்.

ஆனால், அவர் கூறியதை ஏற்க மறுத்த அதிகாரிகள், சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தத்தல் திணறி உள்ளார். நேற்று இரவு வரை அவரிடம் விசாரணை தொடர்ந்து நீடித்தது.

லம்போர்கினி கார்


இந்நிலையில், வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் முறைகேடு செய்யப்பட்ட பணத்தில், லோக்சபா தேர்தலின் போது வாக்காளர்களுக்கு விநியோகிக்க விலை உயர்ந்த மதுபானங்கள், லம்போர்கினி கார், விலை உயர்ந்த வாகனங்கள் வாங்கப்பட்டதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்தும், நாகேந்திரா, தத்தலிடம் விசாரணை நடத்தவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us