கேரளாவில் பா.ஜ., ஓட்டு சதவீதம் அதிகரிப்பு!
கேரளாவில் பா.ஜ., ஓட்டு சதவீதம் அதிகரிப்பு!
கேரளாவில் பா.ஜ., ஓட்டு சதவீதம் அதிகரிப்பு!
UPDATED : ஜூன் 07, 2024 05:46 AM
ADDED : ஜூன் 07, 2024 02:25 AM

திருவனந்தபுரம் : லோக்சபா தேர்தலில் திருச்சூரில் நடிகர் சுரேஷ்கோபியின் வெற்றி மற்றும் ஒட்டுமொத்தமாக ஓட்டு சதவீதம் உயர்ந்திருப்பது, கேரளாவில் புதிய அரசியல் மாற்றத்துக்கான முன்னோட்டமாகவே அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
கேரளாவில் மார்க்., - கம்யூ., தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி மற்றும் காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணிகளே பாரம்பரியமாக கோலோச்சி வருகின்றன. இரு கூட்டணிகளே மாறி மாறி ஆட்சியை பிடித்து வருகின்றன. இந்த லோக்சபா தேர்தலில் தென் மாநிலங்களில் பா.ஜ., கூடுதல் கவனம் செலுத்தியது. அதற்கான பலன் தெரியவந்துள்ளது.
ஆதரவு
தமிழகம் மற்றும் கேரளாவில், பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானாவிலும் இது வெளிப்படை. கர்நாடகாவில் அதிக தொகுதிகளை அள்ளியது.
கேரளாவில், திருச்சூர் தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட பிரபல நடிகர் சுரேஷ் கோபி வென்றார். மேலும், கடந்த 2019 தேர்தலின்போது, 15 சதவீதமாக இருந்த கட்சியின் ஓட்டு சதவீதம், 19 ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளதாவது: கடந்த 2011 சட்டசபை தேர்தலில் இருந்து, பா.ஜ.,வுக்கான ஆதரவு படிப்படியாக உயரத் துவங்கியது. இந்தத் தேர்தலில் அது மிகவும் வெளிப்படையாக தெரிந்துள்ளது.
ஒரு லோக்சபா தொகுதியில் வென்றதுடன், தன் ஓட்டு சதவீதத்தை பா.ஜ., கணிசமாக உயர்த்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணம், பா.ஜ., தன் இருப்பை உறுதி செய்ய மேற்கொண்ட முயற்சிகளே.
மாநிலத்தில் சிறுபான்மையினர், குறிப்பாக கிறிஸ்துவர்கள் அதிகம் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில், 46 சதவீதம் பேர் சிறுபான்மையினர். தலித் கிறிஸ்துவர் எண்ணிக்கையையும் இதனுடன் சேர்த்தால், இங்கு ஹிந்துக்களே சிறுபான்மையினர்.
ஆளும் இடது ஜனநாயக முன்னணி மற்றும் எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகியவை, சிறுபான்மையினரை தாஜா செய்யும் அரசியலில் ஈடுபட்டுள்ளன. இதனால், ஹிந்துக்கள் தாமாகவே பா.ஜ., பக்கம் திரும்பிஉள்ளனர்.
பரபரப்பு
அதுபோலவே, கிறிஸ்துவர்களும், பா.ஜ.,வை ஒரு மதவாத கட்சி என்ற பிம்பத்தை மாற்றிக் கொண்டுள்ளனர். அனைத்து தரப்பினருக்குமான கட்சியாக பா.ஜ., அங்கு பார்க்கப்படுகிறது. அதனால், கிறிஸ்துவர்களின் ஒரு பகுதியினர் ஆதரவும், பா.ஜ.,வுக்கு கிடைத்து வருகிறது.
இங்குள்ள இரண்டு கூட்டணிகளும், முஸ்லிம்களுக்கு மிகவும் ஆதரவாக உள்ளன. தேசிய அளவிலும் இதே நிலைதான் உள்ளது. இதனால், இந்தத் தேர்தல் முடிவுகள், இனி மாநிலத்தில் மும்முனை போட்டியாக மாறும். அடுத்து வரும் தேர்தல்கள் மிகவும் பரபரப்பாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
![]() |