Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/தனிநபரை பாதுகாப்பதில் அக்கறை ஏன்? மே.வங்க அரசுக்கு கோர்ட் கேள்வி

தனிநபரை பாதுகாப்பதில் அக்கறை ஏன்? மே.வங்க அரசுக்கு கோர்ட் கேள்வி

தனிநபரை பாதுகாப்பதில் அக்கறை ஏன்? மே.வங்க அரசுக்கு கோர்ட் கேள்வி

தனிநபரை பாதுகாப்பதில் அக்கறை ஏன்? மே.வங்க அரசுக்கு கோர்ட் கேள்வி

ADDED : ஜூலை 09, 2024 01:48 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி, சந்தேஷ்காலி விவகாரத்தில், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்ட கோல்கட்டா உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, மேற்கு வங்க அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், 'தனிநபரை பாதுகாப்பதில் மாநில அரசுக்கு ஏன் இவ்வளவு அக்கறை?' என, சரமாரியாக கேள்வி எழுப்பியது.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.

போராட்டம்


இங்கு, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் சந்தேஷ்காலி என்ற இடத்தில், தற்போது ஆளும் திரிணமுல் காங்கிரசில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட, ஷாஜஹான் ஷேக் என்பவர், பொது மக்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக நிலங்களை பறித்ததாகவும், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, ஷாஜஹான் ஷேக் தலைமறைவானார். தேசிய அளவில் சந்தேஷ்காலி விவகாரம் கவனம் பெற்றதை அடுத்து, ஆளும் திரிணமுல் காங்., அரசுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

ஒருவழியாக, பிப்ரவரியில் ஷாஜஹான் ஷேக்கை, மேற்கு வங்க போலீசார் கைது செய்தனர். இதன்பின், அவரை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைத்தனர்.

ஷாஜஹான் ஷேக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள ரேஷன் முறைகேடு, அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது தாக்குதல், நில அபகரிப்பு, பாலியல் பலாத்காரம் உட்பட, 43 வழக்குகள் குறித்து, சி.பி.ஐ., முழுமையாக விசாரிக்க, ஏப்., 10ல் கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, மேற்கு வங்க அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மனு தள்ளுபடி


அப்போது, மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி கூறுகையில், “அமலாக்கத் துறை தொடர்பான இரு வழக்குகளை மட்டும் விசாரிக்க, சி.பி.ஐ.,க்கு கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கலாம். ஆனால், ரேஷன் முறைகேடு வழக்கு குறித்து கூட, சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது,” என்றார்.

இதன் பின், நீதிபதிகள் கூறியதாவது:

ரேஷன் முறைகேடு குறித்து, நான்கு ஆண்டுகளுக்கு முன் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் யார்? எப்போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்?

இந்த விவகாரத்தில் பல மாதங்களாக மேற்கு வங்க அரசு எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை. தற்போது, தனிநபர் ஒருவரை பாதுகாப்பதில் மாநில அரசு ஏன் இவ்வளவு அக்கறை காட்ட வேண்டும்?

சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட்ட கோல்கட்டா உயர் நீதிமன்றத்தின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது.

மேற்கு வங்க அரசின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக, மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'உயர் நீதிமன்றம் தன் உத்தரவில் தெரிவித்த சில கருத்துகள், போலீஸ் துறை உட்பட ஒட்டுமொத்த மாநில அரசு இயந்திரத்தையும் சீர்குலைக்கும் வகையில் உள்ளது.

'எந்தவித வழிகாட்டுதலும் இல்லாமல், சி.பி.ஐ.,க்கு தேவையான அனைத்து தகவல்களையும் வழங்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது. இது, மேற்கு வங்க போலீசாரின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் உள்ளது.

'இதன் காரணமாகவே, உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்தோம்' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us