குடிநீர் கட்டண உயர்வு கட்டாயம்: சிவகுமார்
குடிநீர் கட்டண உயர்வு கட்டாயம்: சிவகுமார்
குடிநீர் கட்டண உயர்வு கட்டாயம்: சிவகுமார்
ADDED : ஜூன் 20, 2024 05:53 AM

பெங்களூரு: பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தி, மக்களுக்கு சூடு போட்ட மாநில அரசு, தற்போது குடிநீர் கட்டணத்தை அதிகரிக்க தயாராகி வருகிறது.
பெங்களூரின், சதாசிவநகரில் உள்ள தன் இல்லத்தில், துணை முதல்வர் சிவகுமார் நேற்று அளித்த பேட்டி:
பெங்களூரு குடிநீர் வாரியத்தின் பொருளாதார மேம்பாட்டுக்காக, குடிநீர் கட்டணத்தை உயர்த்த வேண்டியது அவசியம். கடந்த 10 ஆண்டுகளாக குடிநீர் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
நிதி பற்றாக்குறையால் புதிய திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. ஆண்டுக்கு ஆண்டு, நஷ்டத்தின் அளவு அதிகரிக்கிறது. எந்த வங்கிகளும் குடிநீர் வாரியத்துக்கு கடன் உதவி செய்ய முன் வரவில்லை.
குடிநீர் கட்டணமாக கிடைக்கும் வருவாயில், 70 சதவீதம் தொகை மின் கட்டணம் மற்றும் ஊழியர்களின் ஊதியத்துக்கு செலவாகிறது. அரசியல் காரணங்களால், குடிநீர் கட்டணத்தை உயர்த்தாமல், குடிநீர் வாரியத்தை நஷ்டப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தேவையான வருவாய் இல்லாமல், மின் கட்டண பில் கட்டவும் முடியவில்லை. பெருமளவில் மக்கள் தொகை, தொழிற்சாலைகள், அலுவலகங்கள் உள்ள பெங்களூருக்கு குடிநீர் வேண்டும்.
இத்தகைய சூழ்நிலையில் குடிநீர் கட்டணத்தை உயர்த்த வேண்டுமா, வேண்டாமா என்பதை மக்களே கூற வேண்டும்.
அரசியலை ஓரங்கட்டி, முடிவு எடுக்கும்படி உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம் உட்பட பல்வேறு நிறுவனங்கள் ஆலோசனை கூறியுள்ளன. குடிநீர் கட்டணம் உயர்வு உட்பட, பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.