Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/அதானிக்கு அரசு வழங்கிய நிலம் திரும்ப பெற சுப்ரீம் கோர்ட் தடை

அதானிக்கு அரசு வழங்கிய நிலம் திரும்ப பெற சுப்ரீம் கோர்ட் தடை

அதானிக்கு அரசு வழங்கிய நிலம் திரும்ப பெற சுப்ரீம் கோர்ட் தடை

அதானிக்கு அரசு வழங்கிய நிலம் திரும்ப பெற சுப்ரீம் கோர்ட் தடை

ADDED : ஜூலை 11, 2024 12:22 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி, குஜராத்தில், அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட, 266 ஏக்கர் நிலத்தை திரும்பப் பெற உத்தரவிட்ட அம்மாநில உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

குஜராத்தில், கட்ச் மாவட்டத்தின் நவினல் கிராமத்தில் உள்ள, 266 ஏக்கர் மேய்ச்சல் நிலங்களை, பிரபல தொழிலதிபர் கவுதம் அதானியின், அதானி குழுமத்தின் முந்த்ரா துறைமுகத்துக்காக, 2005ல், மாநில அரசு வழங்கியது.

தள்ளுபடி

தொடர்ந்து, 2010ல் அந்த நிலங்களில் அதானி குழுமம் வேலிகளை அமைத்தது. அப்போது தான், மேய்ச்சல் நிலங்கள் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட விபரம், நவினல் கிராம மக்களுக்கு தெரிய வந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குஜராத் உயர் நீதிமன்றத்தில், கிராம மக்கள் சார்பில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், 'கிராமத்தில் உள்ள மேய்ச்சல் நிலங்களில், 266 ஏக்கர் அதானி குழுமத்திற்கு ஒதுக்கப்பட்டது சட்டவிரோதமானது' என, குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, 2014ல், உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, மேய்ச்சலுக்காக கூடுதலாக, 956 ஏக்கர் அரசு நிலம் வழங்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக, குஜராத் அரசு சார்பில் நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிமன்றம், பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது. எனினும், அரசு கூறியபடி மேய்ச்சல் நிலம் வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து, கிராம மக்கள் தரப்பில், குஜராத் உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

அப்போது, 7 கி.மீ., தொலைவில் மேய்ச்சல் நிலம் ஒதுக்கப்படுவதாக மாநில அரசு தெரிவித்தது. 'அவ்வளவு துாரம் கால்நடைகள் பயணிப்பது சாத்தியமில்லை' எனக் கூறி, இதை கிராம மக்கள் ஏற்க மறுத்தனர்.

இந்த வழக்கில், ஒரு நல்ல தீர்வை கொண்டு வரும்படி, வருவாய்த் துறையின் கூடுதல் தலைமை செயலருக்கு கடந்த ஏப்ரலில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நோட்டீஸ்


இந்த வழக்கு, குஜராத் உயர் நீதிமன்றத்தில், கடந்த 5ல் விசாரணைக்கு வந்த போது, அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட, 266 ஏக்கர் மேய்ச்சல் நிலங்கள் திரும்பப் பெற, குஜராத் அரசு முடிவு செய்துள்ளதாக, மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அதானி குழுமம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்த அமர்வு, இதுகுறித்து பதிலளிக்கும்படி, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்பியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us