14 மணி நேரம் பணிக்கு அழுத்தம் சமூக நலத்துறை அமைச்சர் 'சால்ஜாப்பு'
14 மணி நேரம் பணிக்கு அழுத்தம் சமூக நலத்துறை அமைச்சர் 'சால்ஜாப்பு'
14 மணி நேரம் பணிக்கு அழுத்தம் சமூக நலத்துறை அமைச்சர் 'சால்ஜாப்பு'
ADDED : ஜூலை 23, 2024 06:16 AM

பெங்களூரு: ''கர்நாடகாவில் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் ஊழியர்களின் பணி நேரத்தை 14 மணி நேரமாக உயர்த்த, அந்நிறுவனங்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. ஆனாலும், இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் தெரிவித்தார்.
கர்நாடகாவில் தற்போதைய கடைகள், வர்த்தக நிறுவனங்கள் சட்டப்படி, நாள் ஒன்றுக்கு 10 மணி நேரம் மட்டுமே பணி செய்ய வேண்டும். இதில், இரண்டு மணி நேரம், 'ஓ.டி.,' எனும் கூடுதல் நேரமாகும்.
ஆனால், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அரசிடம் சமர்ப்பித்த முன்மொழிவுபடி, 'ஒன்பது மணி நேர பணியை, 12 மணி நேரமாகவும், கூடுதலாக இரண்டு மணி நேரத்தை 'ஓ.டி'யாகவும் அறிவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளன.
அதன்படி, கர்நாடக வர்த்தக கடைகள், நிறுவனங்கள் சட்டத்தைத் திருத்தம் செய்து, 'தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் வேலை நேரத்தை, 14 மணி நேரமாக நீட்டிப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.
இதையறிந்த பல்வேறு தொழிற்சங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. 'இந்த சட்டம் அமலானால், ஊழியர்களின் மன அழுத்தம் அதிகரிக்கும், துாக்கமின்மை, உடல் நலம் பாதிக்கப்படும்' என தெரிவித்துள்ளன.
இந்நிலையில், பெங்களூரில் நேற்று விதான் சவுதா வளாகத்தில் சமூக நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் அளித்த பேட்டி:
தகவல் தொழில்நுட்ப துறை நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களின் பணி நேரத்தை, 14 மணி நேரமாக உயர்த்த, கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்றனவே தவிர, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிரியங்க் கார்கே அல்ல. தொழிலதிபர்கள் தான் எங்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.
இந்த மசோதாவை அமல்படுத்துவது தொடர்பாக, தொழிலாளர் நலத்துறை ஆய்வு செய்து வருகிறது.
இந்த பணி நேரம் நீட்டிப்பு தொடர்பாக, அனைத்து தொழிலதிபர்களும் தங்கள் இணையதளத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்கலாம். தங்கள் கருத்துகளை பொதுமக்கள் தாராளமாக பதிவிடலாம். இதன் மீது எங்கள் துறை நடவடிக்கை எடுக்கும்.
இந்த மசோதாவுக்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
தகவல் தொழில்நுட்ப நிறுவன தலைவர்கள் ஏன் பேசுவதில்லை? மக்கள் தெரிவிக்கும் கருத்துகள் சாதகமாகவோ, பாதகமாகவோ இருந்தாலும், அரசு எது சரியோ அதை செய்யும்.
அரசின் எந்த துறையும் தாமாக முன்வந்து இதை கொண்டுவரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.