குழந்தை திருமண தடை சட்டம் அனைத்து மதத்துக்கும் பொருந்தும்: கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு
குழந்தை திருமண தடை சட்டம் அனைத்து மதத்துக்கும் பொருந்தும்: கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு
குழந்தை திருமண தடை சட்டம் அனைத்து மதத்துக்கும் பொருந்தும்: கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு
ADDED : ஜூலை 28, 2024 11:24 PM

கொச்சி: 'குழந்தை திருமண தடை சட்டம், மத வேறுபாடின்றி அனைத்து இந்திய குடிமக்களுக்கும் பொருந்தும்' என, கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரளாவின் பாலக்காட்டில் வசிக்கும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த சிறுமிக்கு, 2012 டிச., 30ல் திருமணம் நடந்தது. இது தொடர்பாக, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வடக்கன்சேரி போலீசில் புகார் அளித்தார்.
கேரள உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, 'பெண் பூப்பெய்திய உடன் அவருக்கு திருமணம் செய்து வைக்க முஸ்லிம் சட்டம் இடம் அளிக்கிறது' என, சிறுமியின் தந்தை தரப்பில் வாதிடப்பட்டது.
வழக்கு விசாரணை முடிவுக்கு வந்ததை அடுத்து, நீதிபதி குன்னிகிருஷ்ணன் தீர்ப்பளித்தார். அதன் விபரம்:
குழந்தை திருமணங்கள் குழந்தைகளின் அடிப்படை மனித உரிமையை பறிக்கின்றன. கல்வி மறுக்கப்படுகிறது. இளம் வயதில் கர்ப்பம் அடைவதால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. பேறுகால மரணங்கள் நடக்கின்றன. பாலியல் ரீதியிலான தொற்றுகளுக்கு பெண் குழந்தைகள் ஆளாகின்றனர்.
குழந்தை திருமணங்கள் பெண் குழந்தைகளை உணர்வுப்பூர்வமாகவும், மனதளவிலும் சிதைக்கின்றன. சமூக ரீதியாக அவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
மேலும், குழந்தை திருமணம் என்பது சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் மரபுகளையும் மீறுவதாகும்.
குழந்தை திருமண தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், கேரளாவில் தொடர்வது வேதனை அளிக்கிறது.
மதங்களை கடந்து ஒருவர் இந்நாட்டு குடிமகன் என்பதே முதன்மையானது. அதன் பின் தான் அவர் சார்ந்த மதத்தின் உறுப்பினர் என்ற அந்தஸ்தை அடைகிறார். எனவே, குழந்தை திருமண தடுப்புச் சட்டம் - 2006, இந்நாட்டு குடிமக்கள் அனைவருக்கும் பொருந்தும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.