Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ ஆட்டோவில் பயணம் செய்பவர்களே உஷார்! உணர்ச்சிகரமாக பேசி பணம் பறிக்கும் டிரைவர்கள்

ஆட்டோவில் பயணம் செய்பவர்களே உஷார்! உணர்ச்சிகரமாக பேசி பணம் பறிக்கும் டிரைவர்கள்

ஆட்டோவில் பயணம் செய்பவர்களே உஷார்! உணர்ச்சிகரமாக பேசி பணம் பறிக்கும் டிரைவர்கள்

ஆட்டோவில் பயணம் செய்பவர்களே உஷார்! உணர்ச்சிகரமாக பேசி பணம் பறிக்கும் டிரைவர்கள்

ADDED : ஜூலை 10, 2024 04:12 AM


Google News
Latest Tamil News
ஆட்டோவில் பயணம் செய்யும் பயணியரிடம் உணர்ச்சிகரமாக பேசி, சில டிரைவர்கள் பணம் பறிக்கும் சம்பவம் பெங்களூரில் நடந்து வருகிறது.

பெங்களூரு நகரில் ஒரு லட்சத்திற்கு மேல் ஆட்டோக்கள் ஓடுகின்றன. ஆட்டோக்களில் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. முதல் 1.8 கி.மீ., துாரத்திற்கு 30 ரூபாயும், அடுத்த ஒவ்வொரு கி.மீ., துாரத்திற்கும் 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இஷ்டத்துக்கு வசூல்


இரவு 10:00 மணிக்கு மேல் அதிகாலை வரை ஆட்டோக்களில் டிரைவர்கள் மீட்டர்களை போடுவதில்லை. இஷ்டத்திற்கு கட்டணத்தை வசூலிக்கின்றனர். 2 கி.மீ., துாரத்திற்கு பயணம் செய்ய 150 முதல் 200 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.

இதனால் ஆட்டோ டிரைவர்களுக்கும், பயணியருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்படும் நிகழ்வுகளும் நடந்துள்ளன.

இந்நிலையில், பயணியரிடமிருந்து புது டெக்னிக்கை பயன்படுத்தி, சில ஆட்டோ டிரைவர்கள் பணம் வாங்குவது தெரியவந்துள்ளது.

ஆட்டோவில் பயணம் செய்யும் பயணியரின் முகபாவனை, அவர்கள் அணிந்திருக்கும் உடைகள், தோற்றத்தை ஆட்டோ டிரைவர்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர்.

சற்று வசதி படைத்தவர் போன்று தெரிந்தால், ஆட்டோ டிரைவர்கள் நைசாக பேச்சுக் கொடுக்கின்றனர்.

'எங்கள் குடும்பத்தில் கஷ்டம் உள்ளது. என் மனைவி மருத்துவமனையில் உள்ளார். குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. குழந்தையை படிக்க வைக்க பணம் இன்றி கஷ்டப்படுகிறேன்' என, உணர்ச்சிப்பூர்வமாக பேசுகின்றனர். இதை நம்பும் பயணியரும் கட்டணத்துடன், கூடுதல் பணத்தையும் கொடுத்துவிட்டுச் செல்கின்றனர்.

நிறைய ஆட்டோக்களில் இது போன்ற அனுபவத்தை சந்தித்த ஒரு பயணி, சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளார்.

பயணியர் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதையடுத்து சமூக வலைதளங்களில் இது பற்றிய விவாதங்கள் நடந்து வருகின்றன.

இலவசமாக பயணம்


இணையவாசி ஒருவர், 'அடுத்த முறை நீங்கள் பயணிக்கும் ஆட்டோ டிரைவர் உங்களிடம் உணர்ச்சிப்பூர்வமாக பேசி பணம் கேட்டால், நீங்களும் அவரிடம் உணர்ச்சிப்பூர்வமாக பேசி, ஆட்டோவில் இலவசமாக பயணம் செய்யுங்கள்' என கூறியுள்ளார்.

இது மாதிரியான மோசடிகள், ஹெச்.எஸ்.ஆர்., லே -- அவுட் பகுதியில் தான் அதிகம் நடப்பதாக கூறப்படுகிறது. 'கடந்த ஆண்டு முதல், இந்த மோசடி அரங்கேறி வருகிறது' என, இன்னொருவர் கூறியுள்ளார்.

'ஆட்டோ டிரைவர்கள், உங்களிடம் உணர்ச்சிப்பூர்வமாக பேசி பணம் கேட்கின்றனரா? உங்கள் குடும்பத்தினரை எந்த மருத்துவமனையில் அனுமதித்து உள்ளீர்கள்? அந்த மருத்துவமனையின் நம்பர் கொடுங்கள் என்று கேளுங்கள்; அதன் பின்னர் அவர்கள் உங்களிடம் பணமே கேட்க மாட்டார்கள்' என, ஒருவர் பதிவு செய்துள்ளார்.

--- நமது நிருபர் --





      Our Apps Available On




      Dinamalar

      Follow us