ஆம் ஆத்மிக்கு அலுவலக இடம்: மத்திய அரசுக்கு 6 வாரம் கெடு
ஆம் ஆத்மிக்கு அலுவலக இடம்: மத்திய அரசுக்கு 6 வாரம் கெடு
ஆம் ஆத்மிக்கு அலுவலக இடம்: மத்திய அரசுக்கு 6 வாரம் கெடு
ADDED : ஜூன் 05, 2024 11:43 PM

புதுடில்லி: தேசிய கட்சி அந்தஸ்து பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு, தலைநகர் டில்லியில் அலுவலக இடம் ஒதுக்குவது தொடர்பாக ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்க, மத்திய அரசுக்கு டில்லி உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
புதுடில்லி மற்றும் பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும், டில்லி முதல்வராகவும் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். ஆம் ஆத்மிக்கு தேசிய கட்சி அந்தஸ்து கிடைத்தது. இதைத் தொடர்ந்து, தேசிய கட்சிகளுக்கு டில்லியில் அலுவலகம் கட்டுவதற்கான நிலத்தை ஒதுக்கும்படி, ஆம் ஆத்மி கோரியது.
இதற்கிடையே, புதுடில்லி உயர் நீதிமன்ற வளாக விரிவாக்கத்துக்காக, தற்போது ஆம் ஆத்மி அலுவலகம் உள்ள, ரோஸ் அவென்யூ அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 15ம் தேதிக்குள் காலி செய்யும்படி, ஆம் ஆத்மிக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கெடு விதித்திருந்தது.
கட்சிக்கு டில்லியில் உடனடியாக நிலம் ஒதுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இடைக்கால தீர்வாக, டில்லியில் அரசு பங்களாவை ஒதுக்க உத்தரவிடக் கோரி, ஆம் ஆத்மி சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இது நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆறு வாரங்களுக்குள் இதில் முடிவு எடுக்கும்படி, மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.