ஒடிசா புதிய முதல்வராக மோகன் சரண் மஜி தேர்வு
ஒடிசா புதிய முதல்வராக மோகன் சரண் மஜி தேர்வு
ஒடிசா புதிய முதல்வராக மோகன் சரண் மஜி தேர்வு
ADDED : ஜூன் 12, 2024 01:12 AM

புவனேஸ்வர், ஒடிசாவின் புதிய முதல்வராக, பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மோகன் சரண் மஜி, 52, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒடிசா முதல்வராக, பிஜு ஜனதா தளத்தின் தலைவர் நவீன் பட்நாயக் கடந்த, 24 ஆண்டு களாக பதவி வகித்தார். இம்மாநிலத்தில் உள்ள 147 சட்டசபை தொகுதிகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது.
இதில் பா.ஜ., 78 இடங்களிலும், பிஜு ஜனதா தளம் 51 இடங்களிலும், காங்., 14 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதன் வாயிலாக முதல்வர் நவீன் பட்நாயக்கின் நீண்ட கால ஆட்சி முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், ஒடிசா பா.ஜ., சட்டசபை தலைவரை தேர்வு செய்வதற்காக, அந்த கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நேற்று புவனேஸ்வரில் நடந்தது.
இதில், அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர்களான, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் பூபேந்தர் யாதவ் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், கியோன்ஜர் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்ற மோகன் சரண் மஜி, பா.ஜ., சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஒடிசாவின் புதிய முதல்வராக அவர் பதவியேற்க உள்ளார்.
பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மோகன் சரண் மஜி, பா.ஜ., சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு நான்கு முறை வெற்றி பெற்று உள்ளார்.
கடந்த சட்டசபையில், அக்கட்சியின் கொறடாவாக பதவி வகித்தார். இதேபோல் துணை முதல்வர்களாக கே.வி.சிங் தியோ மற்றும் பிராவதி பரிதா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஒடிசாவின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளது.